Dienstag, 12. Mai 2020

தெய்வம்

1967 மார்கழி 15 இல் வெளியான மல்லிகை இதழில்
இடம்பெற்றிருந்த எனது கவிதை!

(அப்போது எனது புனைபெயர் - புங்கையூர் மகேசன்)
























தெய்வம்
- புங்கையூர்  மகேசன்

தெய்வமொன் றுண்டென்ற செய்தி கேட்டுத்
தெய்வமதைக் காணவெனத் திண்மை யுற்றேன்
பொய்யான வார்த்தையிது புரியா தேனோ
புகுகின்றாய் வீண்வேலை யென்றே சொன்ன
மெய்யன்பு கொண்டிட்ட நண்பர் வார்த்தை
விலக்கியபின் முனைந்திட்டேன் தெய்வம் காண
வெய்துறுதல் வேண்டுமெனும் உண்மை நெஞ்சில்
வேதனையை மூட்டியது விரைதலுற்றேன்

இப்புவியில் எங்கெங்கோ தேடி நின்றும்
இல்லையொரு தெய்வமென எண்ணி நெஞ்சில்
செப்புவழு வுற்றேனோ வென்றே தேரச்
சேயானேன் தாயவளைத் தேடிநின்று
இப்போது சொல்கின்றேன் அன்னா யிங்கு
இல்லையொரு தெய்வமெனச் செப்பும் வேளை
அப்போது அன்னையவள் புன்னகைத் தாள்
அன்ப தே தெய்வமென உற்றுணர்ந்தேன்

Dienstag, 5. Dezember 2017

நல்ல மனம் வாழ்க !






நல்ல மனம் வாழ்க !

-இந்துமகேஷ்


தங்கள் எழுத்துக்களால் என் இதயத்தில் தங்கள்  பெயர்பதித்துப் போனவர்களையும் பெயர்பதித்துக் கொண்டிருப்பவர்களையும் பதிவுசெய்யும் நோக்கோடு பூவரசம்பூ என்னும் இந்த வலைப்பக்கத்தை  உருவாக்கினேன். அரிச்சுவடியிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்ற நினைப்பு என்னை ஆட்கொண்டிருந்ததால் என் பால பருவத்திலிருந்து என்னைக் கவர்ந்தவர்கள் என்று தொடங்கி இன்று வரை வரிசைக்கிரமமாய்ப்  பதிவு செய்யவே விரும்பினேன்.


ஆனால் அதற்கான சூழல் அமையாது போயிற்று. முன்னவர்களைப்பற்றிய குறிப்புக்களை  எழுதி முடிப்பதற்கே உன் ஆயுள் போதாதே.. 60 ஆண்டுகால ஈழத்துப் படைப்புக்களை உன்னால் எப்படி எழுதி முடித்துவிட முடியும் என்று என் மனம் என்னைக் கேலி செய்தது. இன்றைய தலைமுறைவரை எழுதினால்தானே உன் படைப்பு முழுமை பெறும் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.

 அரிச்சுவடியிலிருந்து வரிசைக்கிரமமாக எழுதும் எண்ணத்தை மாற்றி அவ்வப்போது நினைவில் வருபவர்களையும்  நிகழ்காலத்தில் என் வாசிப்புக்குரியவர்களையும் இணைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.


என்னதான் உலகப் பரப்பளவில் வாசித்துக்கொண்டிருந்தாலும் நமது படைப்புக்கள்- நமது படைப்பாளர்கள் என்று ஒரு  வட்டத்துக்குள் மனம் ஒடுங்கிப்போவதைத் தடுக்கமுடிவதில்லை.


பத்திரிகைகள்  சஞ்சிகைகள்  என்று வாசித்துக்கொண்டிருந்த காலம்போல் அல்லாமல் வலைப் பதிவுகள் என்று வந்தபிறகு அதிகரித்துவிட்ட படைப்புக்களும் படைப்பாளர்களும் மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்:  எல்லாவற்றையும் எல்லோரையும் ஒரேமூச்சில்  எழுதிவிடமுடியாதபோதும் ஒரு சிலரையேனும் என் பதிவுகளில் இணைத்துவிட்டால்  அவர்களிலிருந்து இன்னும் பலர் பதிவுகளைத் தொடங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு எழுத முயன்றேன்.


பூவரசு வெளிவந்தபோது என்னுடன்  அரிமுகமாகிய இளைஞர்களில்  இருவர் எழுத்துலகில் எனது மனோநிலையை ஒத்திருக்கக் கண்டேன்.


முன்பின் அறிமுகமில்லாத அவர்களின் அன்பும் படைப்புக்களும் என்னை அவர்கள்பால் ஈர்த்தது.

என் இலக்கியத்தம்பிகள் என்று என் எழுத்தாள நண்பர்களுக்கு அடையாளப்படுத்திய அவர்களில் ஒருவர்; கானாபிரபா என்ற இலக்கியத்தம்பி.


ஈழத்துப் படைப்புக்கள் படைப்பாளர்கள்  என்று அதிக ஆர்வமும் அக்கறையும் காட்டுபவராக அவர் இருக்கிறார். அவரது எழுத்தாற்றலும்  இரசனை மனமும் அவரை ஒரு சிறந்த படைப்பாளியாக அடையாளம் காட்டுகிறது.  தனது வலைப்பதிவுகள்மூலம் பல்லாயிரக்கணக்கான வாசகர்களையும்  நட்புக்களையும்  பெற்றிருக்கும் அவருக்கு நான் அறிமுகம் தரத் தேவையில்லை. 


இன்று தனது வலைப்பதிவில் தனது 12 ஆண்டுப் பயணம்பற்றிப் பதிவிட்டிருந்தார் அவர்.
https://kanapraba.blogspot.de/



 "அந்த நல்ல மனம் வாழ்க!" என்று இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரைப் பற்றிய இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன். தன்னைப் போன்ற கலை இலக்கியவாதிகளை இணைத்துக்கொண்டு தமிழ் எழுத்துலகில் அவர் பணி சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.

-இந்துமகேஷ்




Mittwoch, 15. November 2017

நெஞ்சம் மறப்பதில்லை





 நெஞ்சம் மறப்பதில்லை!
-இந்துமகேஷ்

அமரர் இராஜன் முருகவேல்
( எழுத்தாளர் சோழியான்)
தோற்றம் 15.04.1960  மறைவு: 15.11.2016

அன்பு முகமிழந்தோம் அழுதவிழி காயவில்லை.
ஓராண்டு ஆனதையா உன்னுருவை நாம்பிரிந்து!
எழுத்தால் நீ வாழ்ந்திருப்பாய் எம்முடனே எப்போதும்
நிலைத்திருப்பாய் உனையெங்கள் நெஞ்சம் மறப்பதில்லை!

உன் அன்பின் நினைவுகளுடன்
இந்துமகேஷ்






அமரர் இராஜன் முருகவேல் அவர்களின் நினைவாக...

(கதை, கவிதை,  கட்டுரை, நாடகம், விமர்சனம்  என படைப்பிலக்கியத்தின் அத்தனை வடிவங்களிலும் தனது தனித்துவத்தை அடையாளப்படுத்தியவர் திரு இராஜன் முருகவேல் அவர்கள். பூவரசுமீது அவர்கொண்டிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக அவர் நிறையவே எழுதினார். பூவரசு 10வது ஆண்டு
நிறைவு மலருக்கென - 2001 தை இதழில்-  அவர் எழுதிய வாழ்த்துச்செய்தி இது)



என்ன சொல்லி வாழ்த்த...?!



கொஞ்சநாளாக ஒரே தலைச் சொறியல்.
தலையைச் சொறிஞ்சு சொறிஞ்சு ஏற்கனவே கொட்டுண்டுற மயிரோடை இன்னும் கொஞ்சம் சேர்ந்து கொட்டுண்டுற மாதிரி ஒரு பிரமை.
அட.. முடி போனாலும் பரவாயில்லை உதுக்கொரு முடிவு வரவேணும் பாருங்கோ..!

“இஞ்சேருங்கோ.. இஞ்சேருங்கோ!…"
தெனாலி வந்தாலும் வந்தது இதுக்கொண்டும் குறைச்சலில்லை.
இது அன்பான அழைப்பில்லை லேட்டஸ்ட் ஃபாஷனாம் பாருங்கோ..!
“என்னப்பா..? தலையிலை சொடுகு கிடுகு பிடிச்சிட்டுதே..?”

பத்திக்கொண்டு வந்தது.
இசகு பிசகாய்க் கதைச்சால் பேந்து காரியம் அவ்வளவுதான்.
இண்டைக்கு எப்பிடியாகிலும் எழுதிப்போடவேணும். இந்தவட்டைக்குப் புத்தகம் முடிஞ்சுதோ தெரியேல்லை

ஒவ்வொரு முறையும் இப்பிடித்தான்.
பூவரசு ஆண்டுமலருக்கு ஒரு வாழ்த்து எழுதவேணும் எண்டு யோசிக்கேக்க ஏதாவது வந்து குழப்பிப்போடும். இந்தமுறை பத்தாவது ஆண்டு நிறைவுமலர். எழுதவேணும் எப்பிடியும் ரண்டு வரியாலும் எழுதவேணும்  எண்டு வெளிக்கிட்டால் இன்னும் எழுதினபாடாய்க காணேல்லை.
ஏதாலும் ஒண்டு வந்து குறுக்கிடுது...
ரண்டு வரி எழுதவேணும் எண்டு குந்தினபேந்துதான் இந்தத் தலைச்சொறியல் வேலை.
ரண்டு வரியோடை முடிஞ்சுபோற சங்கதியா இது?

ஒருமுறை எனது மதிப்புக்குரிய கவிஞர் திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் சொன்னது அப்பதானா நினைவுக்கு வரவேணும்?
"ராஜன் நீர் பல சஞ்சிகைகளில் சிறுகதைகள் எழுதினாலும் பூவரசில் எழுதிற கதையள்தான் நல்லாய் இருக்கிறது.!"

ஏன் அப்படி..?
-எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.

தரமான சஞ்சிகைக்கு எழுதுகிறோமே என்ற பயமா, அல்லது கவிஞர் எழிலன், திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் போன்றவர்களின் ஆக்கங்களுக்கு சோடைபோகக் கூடாதென்ற ஆசையா, அல்லது எனது அபிமான எழுத்தாளரின் கேலிக்கு (அவர் வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும்) ஆளாகக் கூடாதே என்ற விருப்பமா என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

இத்தனைக்கும் மேலாக ஒன்றுண்டு என நினைக்கிறேன். அதாவது ஆசிரியர் எனது முகத்துக்காக எனது ஆக்கத்தைப் பிரசுரித்தாலும் அதனால் பூவரசின் தரம் குறைந்துவிடக்கூடாதென்ற அவா என்று கூறலாம்.

வாழ்த்து விசயத்திலும் இந்தப் பிரச்சினைதானுங்க  இடையிலை பூந்து என்ரை தலையைச் சொறிய வைச்சு....
இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ சொடுகே? எண்டும் கேக்கவைச்சு.. மூட் அவுட்!

மற்றநாள் எழுதியே தீரவேணும் எண்டு குந்தினால் அந்தநேரம் பார்த்துத்தானா ரெலிபோன்.

„ஹலோ!“
„என்ன செய்யிறாய்?“
இதுக்கு என்ன பதில் சொல்லுறது?
„இருக்கிறன்!“
„ஓரு இடத்துககுப் போகவேணும் வாறியே..?“
„இப்ப நேரமில்லை.!“
„வீட்டிலை என்ன செய்யிறாய்? எந்தநேரம் பார்த்தாலும் படுக்கையாக்கும்!“
„இல்லை ...எழுதவேணும்!“
„காயிதமோ?“
„இல்லை ..வேறை!“
“உனக்கு இந்தப் பைத்தியம் உதை எப்பத்தான் விட்டுப்போட்டு உருப்படுற வழியைப் பார்க்கப் போறியோ தெரியேல்லை.. இப்ப வாறியோ இல்லையோ.. ஒருத்தன் வாறனெண்டு சொன்னவன் அவனைக் கூட்டிக்கொண்டு வரவேணும்! பேச்சுத் துணைக்குத்தான் கேக்குறன்.!”

ம்.. எழுதி உருப்படாதது..பேசினால் உருப்படுமாம்.
“இல்லை மச்சான் கனபேர் பாவிக்காமை ஆனா ஆவன்னா எழுத்துக்கள் எல்லாம் குவிஞ்சுபோய்க் கிடக்கு. என்னைப்போலக் கொஞ்சப்பேராலும் அதுகள் எல்லாம் அழுகிறதுக்கு முந்திப் பாவிச்சுப் போடவேணும் எண்டு எழுதுறமாதிரி நானும் எழுதவேணும். அதாலை நான் இப்ப வரேல்லை!
- சொல்ல நினைத்ததும் சொல்லாமல் போனதும் இதுதான்
பேந்தென்ன அண்டைக்கும் - மூட் அவுட்.

இண்டைக்கு எப்படியாகிலும் எழுதிப்போடவேணும்.
எப்பிடித் தொடங்கிறது?
தனியொரு மனிதனாக பத்தாண்டுகள் ஒரு தரமான சஞ்சிகையை மட்டுமல்லாமல் தரமான ஆக்கதாரர்களையும் வாசகர்களையும் தக்கவைத்துள்ள செயலைக் குறிப்பிடலாமா? ஒரு தசாப்தத்தை நிறைவுசெய்யும் வேளையில் அதன் மூச்சாகப் பின்னணியில் தசாவதானியாக இயங்கிப் பல்வேறு விசயங்களையும் இலக்கிய நயத்துடன் தரும் ஆசிரியரின் உணர்வு பூர்வமான சேவையில் தோய்ந்த பணியைக் குறிப்பிடலாமா?
எழுத்தாளர்களை மட்டுமன்றி கலைஞர்களுக்கும் களம்தந்த கரம்பற்றி முன்னிறுத்தி நிறைகுடமாக தழும்பாமல் நிலைத்து நிற்கும் மகேஷண்ணையின் தாய்மையுணர்வைப்பற்றி (மன்னிக்கவும் வேறு எப்படிச சொல்லலாம்) குறிப்பிடலாமா?

„மடையா ...மடையா..!”
என்னைத்தான் ஒருவன் அதட்டி அழைத்தான். சோழியான்தான்!
“உதையெல்லாம் எழுதுறதுக்கு முந்தி உன்னைப்பற்றி எழுதடா.. உனக்கு பூவரசு தந்த கௌரவத்தை எழுதடா.. உன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமனத்துடன் தோளில்தட்டிப் புல்லரிக்க வைத்த அந்தப் பிரபலமான எழுத்தாளரைப்பற்றி எழுதடா..
உனது கதைகளைப புத்தகமாக்க என எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது தனது சொந்த அலுவல்களைப் புறந்தள்ளி தனது கைகளால் புத்தமாக்கி வெளியிட்டு உனக்கொரு மகுடம் தந்த அந்தப் பேருள்ளத்தைப் பற்றி எழுதடா.. அந்த உள்ளம் உன்னைப்பொறுத்தளவில் வேறெங்கு சந்திக்கும்?

சோழியான் சொல்லச்சொல்ல எங்கோ ஒரு நெருடல்..
என்னைப்போல எத்தினைபேரைக் கண்டிருப்பார் மகேஷண்ணை!
மறுபடியும் மூட் அவுட்

ம் பொறுத்தது போதும் இதுதான் கடைசி முயற்சி. சோட் அன்ட் சுவீற்றாய் நறுக்கென்று எழுதவேணும்

அந்தநேரம் பார்த்து என்ரை வாரிசு...
„அப்பா பூவரசு எங்கை இளந்தளிர் பாக்கவேணும்!“.
அடடா இளஞ்சந்ததிக்கு பூவரசு செய்த சேவையையும் குறிப்பிடாமல் போனால் எப்படி?
ஆண்டு விழாக்களிலே மேடையேறி திறமையால் உள்ளம்  கவர்ந்த இளம் கலைஞர்களின் திறமையைக் குறிப்பிடாமல் போனால் எப்படி?
ஒரு தலைமுறையின் காலத்தைப் பத்தாண்டுகள் என்பார்கள்.
அவ்வாறாயின் பூவரசு ஒரு தலைமுறையைத் தாண்டிவிட்டது.

இதை எல்லாவற்றையும எழுதி வாழ்த்திறதெண்டால்..
டென்ஷன் டென்ஷன்.. மறுபடியும் மூட் அவுட்டாவதற்குள் ..
„வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
என் இதயத்தில் குடிகொண்ட பூவரசே
நீ இன்றுபோல் என்றும் பல்லாண்டு காலம்  வாழ்க வாழ்க!
அவசரமாக நான் எழுதியதைக்கண்டு சிரித்த சோழியானைப் பார்த்தேன்.
„என்ன சொல்லி வாழ்த்த எப்படி வாழ்த்த என்று முழிக்கிறியே அதுதான் பூவரசின் சிறப்பு. அதுதான பூவரசின் பெருமை! வெறும் எழுத்துக்களால் அடக்கிவிட முடியாமல் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் வியாபித்து நிற்கும் சஞ்சிகைதான் பூவரசு.“
அவன் சொல்வது உண்மைதான்.
ம்.. மறுபடியும் மூட் அவுட்

இந்த மலருக்கு வாழ்த்தெழுத முடியாவிட்டால் பரவாயில்லை இருபதாவது ஆண்டு நிறைவு மலர் வரும் அப்ப அந்தமாதிரி ஒரு வாழ்த்து எழுதித்தான் தீருவன்.
மறுபடியும் பார்.. அந்த மாதிரி எண்டேக்கைதான் என்ரை நாடகம் ஞாபகம் வருகுது ஜேர்மனியிலை நான் எழுதின முதல் நாடகம் 
அதுக்கும் களம் தந்தது பூவரசுதானே !
இதுக்கு மேலையும் தலையைச் சொறிய ஏலாதுங்க..

-இராஜன் முருகவேல் (சோழியான்)

(பூவரசு 10வது ஆண்டு நிறைவு மலர் - தை 2001- இல் பிரசுரமானது)

Mittwoch, 18. Oktober 2017

பூவரசு நிழலினிலே....




நீங்காத நினைவுகள்!

பூவரசு நிழலினிலே
புதுப்பாட்டுக் கேட்கிறது!
- இந்துமகேஷ்



STS கலையகத்தின் முத்திரையுடன் வெளிவந்த முதலாவது இசைப்பேழை இது.
புத்தாயிரம் ஆண்டில் இசைக்கவிஞன்  சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா எனும் சீரிய கலைஞனின்  இசை ஆர்வத்தையும்  தனித்துவத்தையும் பிரதிபலிக்கும் முதல் வெளியீடாக இது அமைந்தது.

ஜெர்மனி பிறேமன் நகரில் 2000 வருடம் சித்திரைத் திங்களில் பூவரசு கலை இலக்கியப் பேரவையின் ஆதரவுடன் இதன் வெளியீட்டு விழா நிகழ்ந்தது.

பூவரசு  வைகாசி -ஆனி 2002இல் வெளியான பூவரசு 75வது சிறப்பிதழில் நமது கலைஞர்   இசைத் தென்றல் எஸ்.தேவராஜா வழங்கிய செவ்வியில் இந்த இசைப்பேழை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்_

பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக்கேட்கிறது என்ற இசைப்பேழைமூலம் இசையுலகில் நீங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்கள் என்ன? இரசிகர்களின் கருத்துக்கள் எவ்வாறிருக்கின்றன?

நிச்சயமாக!  இது எங்கள் சொந்த ஏஸ்.ரி.எஸ். ஒலிப்பதிவகத்தில் தயாரிக்கப்பட்டது. எனது பழைய ஒலிபெருக்கி அனுபவம் இங்கே எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது. இந்துமகேஷ் அண்ணரும் நானும் இணைந்து
பல புதிய பாடகர்களையும்  இதில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இருவரும் பாடல்களை எழுதியுள்ளோம்.
அத்தோடு எல்லாப் பக்கவாத்தியக் கருவிகளையும் நானே தனித்து மீட்டியுள்ளேன். எனது துணைவியார் ஒலிப்பதிவு உதவி செய்திருந்தார். தொழில்நுட்ப உதவி சிறீதர். பாடல் ஒலிப்பதிவில் சிக்கல்கள்
ஏதுமில்லை. நான் நினைத்ததைவிட எல்லாப் பாடகர் பாடகிகளூம் திறம்படப் பாடியிருந்தார்கள்.  இதில் ஜனனி - தர்சினி இவர்கள் வானொலி நிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள். நான் சொல்லிக் கொடுத்ததை உள்வாங்கி உயிரூட்டிப் பாடினார்கள். மற்றக் கலைஞர்கள் மேடை அனுபவம் உள்ளவர்கள். வளர்ந்துவரும் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதால் அவர்களைப்பற்றி இங்கு குறிப்பிட்டேன்.

இசைப்பேழைக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. காகன் என்ற நகரிலிருந்து ஒருவர் கிட்டத்தட்ட அரைமணிநேரம் பாடல்கள்பற்றியும் இசைபற்றியும் தொலைபேசிமூலம் பாராட்டினார். அவர் தன் பாடல்களுக்கு இசை அமைத்துத் தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

பூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக்கேட்கிறது எனும் இந்த இசைப்பேழை 1998இல் வரவேண்டிய
இசைப்பேழை. 2000 ஆண்டு வெளியானது.  இந்த இசைப்பேழை என்னில் எழுந்த ஆதங்கத்தால்  வெளியானது.

சு.தயாபரன்மூலம் அறிமுகமான இந்துமகேஷ் அண்ணரின் தொடர்பு  பூவரசு ஆண்டுவிழா மேடைகளின் இசைப்பணிக்குள் என்னை இறுக்கமாக்கியது. நாட்டுக்காக மேடையேறிய நாம் வெளீயே மேடை நிகழ்வு பூவரசின் நிகழ்வே. இதில் ஜோன்சன்இ பேபி ஜோன்சன் இவர்களை என்னோடு பூவரசு மேடைகளில் இணைத்துக்கொண்டேன். இந்துமகேஷண்ணர் எழுதிய பாடல்கள் அண்ணர் பாலசுப்பிரமணியம் அவர்களின் மெட்டுடன் ஒரு சிலது எனது இசையிலானது.பின்  என்னிடம் முழுப்பணியுமாகத் தொடர்ந்தது. ஒருமுறை இந்துமகேஷ் அண்ணர் சொன்னார்-
இந்த ஆண்டு விழாவில் உங்கள் பாடல்கள்தான் முழுமையாகவென்று. இல்லை அப்படி நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறி அவரது பாடல்களோடு எனது பாடல்களும் இணைத்தேன்.
இவ்வளவும் ஏன் சொல்கிறேனென்றால் இவர் எப்படித் தெரிந்துகொண்டார் என்னிடம் இசையமைக்கும் திறனும் பாடல்கள் எழுதும் திறனும் உண்டென்பதை. இவர் மற்றவர்  திறனை மனக்கண்ணால் எடைபோடுவதில் வல்லவர்.






இசைத்துறையில் உங்கள் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

இப்போதைக்கு ஆங்கிலப்பாடல்கள். ஈழத்தவர்தான் செய்கிறார். அதற்கான என் இசைப்பணி முடிவடைந்து ஆறு மாதங்களாகின்றது. அவர் பாடி முடித்தால் அந்த இசைப்பேழை வெளிவரும். அவர் பெயர் மோஹனதாஸ். இவர் கோப்லன்ஸ் என்னும் நகரில் வாழ்பவர். தற்சமயம் ஒருவர்
வானலையில் தான் எழுதிமுடித்த பாடலுடன் நோர்வே எஸ் பாஸ்கரன் பாடலும் சிலது இணைத்து  என்னிடம் இசையாக்கத்துக்கு வந்தது. அந்த இசைப்பணியும் இன்னும் இரண்டு கிழமைகளில் முடிந்துவிடும். அவர் பாடி முடித்தால் அதுவும் விரைவில் வெளியாகும். பின் சிறுபிள்ளைகளைப்
பாடவைத்த ஒரு இசைப்பேழையும் எமது பாடல்கள் அடங்கிய இசைப்பேழைகளும் வெளிவரவுள்ளன.

இசைத்தென்றல் எஸ்.தேவராஜா அவர்களின் இந்தப்பேட்டி பூவரசில் வெளிவந்து ஒரு தசாப்தத்தும் மேலாகிவிட்டது. இந்த இடைக்காலத்தில் எஸ்.ரி.எஸ் கலையகம் எத்தனையோ வெளியீடுகளைக் கண்டிருக்கிறது. அவைபற்றிய முழுவிபரங்களை stsstudio.com இணையத் தளத்தில் காணலாம்.


இவ்வாண்டு தமிழருவி விருது 2017க்கான  -  ஊடகத்தென்றல் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் திரு. தேவராஜா அவர்கள். சக  கலைஞர்களை வாழ்த்துவதில் முன்னிற்கும் அந்த நல்ல மனம் வாழ்க என வாழ்த்துவதில் மனநிறைவு கொள்கிறோம் நாம்.
அவரது கலைப்பயணம் மேன்மேலும் மேன்மைபெற வாழ்த்துவோம்!


-இந்துமகேஷ்

Mittwoch, 11. Oktober 2017



நீங்காத நினைவுகள்.

தமிழருவி இசைவிழாப் போட்டி 1993

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் கலை இலக்கிய கலாச்சார அரசியல் முன்னெடுப்புக்களை நோக்காகக்கொண்டு  மாத,  இருமாத  காலாண்டுச் சஞ்சிகைகள்  பல தோன்றி பொருளாதார அரக்கனுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் தம்மை முடக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் செய்திப் பத்திரிகை ஒன்றின் அவசியத்தையுணர்ந்து எசன் நகரில் ஊற்றெடுத்த தமிழருவி இன்று ஜெர்மனியில் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரந்தோடி ஓராண்டை நிறைவு செய்திருப்பது பாராட்டிற்குரிய சாதனைதான்.

ஈழத்தமிழர்களிற்காக ஊற்றெடுத்த தமிழருவி ஈழத்தின் கலைஞர்களையும் மறக்காமல் தன் ஓராண்டில் கௌரவித்தது சாதனையின் இரண்டாம் படியே.

ஈழவிடுதலைக்கு இன்னுயிர் உவந்தளித்த போராளிகளை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியுடன் ஆண்டுவிழா ஆரமபமாயிற்று. மங்கள வாத்தியக் கலைஞர் கணேஸ் குழுவினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனக் கௌரவிப்புக்கள்...
பிரதம விருந்தினராக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் திரு இரா.ந.வீரப்பன் கலந்துகொண்டார்.
பிரபல எழுத்தாளரும் பூவரசு ஆசிரியருமான திரு இந்துமகேஷ் விழாத் தலைமையேற்று சஞ்சிகைகள்,  பத்திரிகைகள் என்பனவற்றின் பணிபற்றி உரையாற்றினார். 

சிறப்புரை வழங்கிய ஈழநாடு அசிரியர் திரு குகநாதன்  தமிழருவியின் சிறப்பையும் அதன் பணியையும் மெச்சியதும் சகோதரப் பத்திரிக்கையை  சமனாக நோக்கியதும் பத்திரிகைத் துறையினருக்கு இருக்கவேண்டிய பரந்தநோக்கை வெளிப்படுத்தியது மெச்சவேண்டிய ஒன்றே.

விக்கினேஸ்வரா நடனக் கலாமன்ற நர்த்தகிகள் சிறப்பான நாட்டியக் கலையை வழங்க கமலபாதம் - தாஸ் குழுவினர் தாமும்  சளைத்தவர்கள் அல்ல எனத் தமது திறனை வெளிப்படுத்தி சபையோரின் கரகோஷங்களைப்
பெற்றுக்கொண்டனர். திரை இசை நடனங்களும் வந்துபோயின.

விழாவில் பிரதான நிகழ்ச்சியான இசைப் போட்டிக்கு இசைக்குழுக்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டன. நடுவர்களாகக் கடமையாற்றிய பார்வையாளர்களில் பெரும் பகுதியினரான எசன் நகரமக்களாகிய தமிழருவியின் வாசகர்கள் தம்மூர்க் கலைஞர்கள்  என்ற பெயரில் ஒருபக்கம் சாராது  ஆறு இசைக் குழுக்களினதும் திறனாய்ந்து பாடல்களினதும் பாடகர்களினதும் தரமாய்ந்து தீர்ப்பு வழங்கியது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும்.

பங்குபற்றிய னைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்: தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிவரும் தமிழருவி  தமிழ் இசைக் கலைஞர்களுக்கு வழங்கியுள்ள இந்தக் கௌரவம் காலந்தோறும் நினைவு கூரத்தக்கது என்பதில் சந்தேகமில்லை.


( பிரசுரம்:  பூவரசு கார்த்திகை மார்கழி 1993)











நல்லமனம் வாழ்க!


தமிழவேள் திரு நயினை விஜயன்

1979 முதல் எமது தாய்மொழிக்காகவும், கலைவளர்ச்சிக்காகவும் இன்றுவரை  அயராது உழைத்துக்கொன்டிருப்பவர்.
20 ஆண்டுகளாக எசன் நகரில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நுண்கலைகல்லூரியை நடாத்தி வருபவர்.
எமது பாரம்பரியக் கலைகளை 3 தலைமுறைக் குழந்தைகளுக்கு பதியமிட்டுள்ளார். இவரது சேவையைப்  பாராட்டி தென்னாபிரிக்கத் தமிழர்களும், பெங்களூர் டாக்டர். அம்பெத்கார் பல்கலைகழக முதல்வரும்
பாராட்டி வாழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உ.த.ப.இயக்க தலைவர் பேராசிரியர் இர.ந.வீரப்பன்  அவர்களால் தமிழவேள் என சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தமிழிசைத் துறைக்கு யெர்மனியில் காத்திர்மான பங்களிப்பைசெய்துள்ளார் இவரது முயற்சிகளுக்கு ஆசிரியையான திருமதி.சசிகலா விஜயன் உற்ற துணை என்பதை என்றும் நினைவில் கொள்வார்.
இவர் ஒரு செயல்பாட்டு வீரர். துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டவர் கம்பீரமான இவருடைய நடவடிக்கைகள் வியந்து பார்த்து மனம் கொள்ளத் தக்கவை.

தனது நகரத்தில் நடைபெறும் வெளிநாட்டவர் வாரத்தில் தமிழரின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளை  பல்கலாச்சார  நிகழ்ச்சிகளில் பங்காற்றச் செய்பவர்.
ஐந்து வருடங்களாக தமிழருவியின் இசைத்திருவிழாவை நடத்தி சிறந்த ஆண் பாடகர்,சிறந்து பெண் பாடகர்,
சிறந்த ஜோடிப் பாடகர்களைத் தெரிவு செய்தும் சிறந்த இசைக்குழுவையும் இரசிகர்களின் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்து பரிசளித்து கௌரவித்தவர்.

தொடரும்  அவரது தமிழ்த்தொண்டும் கலைத்தொண்டும் இனிதே தொடர மனதார வாழ்த்துகிறோம்.

-இந்துமகேஷ்

Montag, 25. September 2017

நீங்காத நினைவுகள்!




இரங்கும் இல்லத்தில்
எமது கலைஞர்கள்!

1992 ஐப்பசித் திங்களில் ஒரு நாள்.

„ ஜேர்மனியில் பல பாகங்களில் மலர்ந்து மணம்கமழ்ந்து மணிகளாய்ச் சிதறிக் கிடக்கும் கலைஞர்கள், வாழும்கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுப்பணியாளர்கள் அனைவரையும் ஓரணியில் சேர்த்து பலவண்ணம் நிறைந்த மலர்மாலையாக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளேன். 17.10.92 சனிக்கிழமை அன்று பிராங்க்பேர்ட்டில் மாலை 4மணிமுதல் இரவு 10மணிவரை வருகைதரும்  அனைவரும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடவும் அவர்களைச் சமமாய்க் கௌரவித்து பரிசில்கள் வழங்கவும் அவர்கள்பற்றிய சஞ்சிகை ஒன்றை வெளியிடவும் இராப்போசனம் வழங்கவும் அதே மண்டபத்தில் சிறியபிள்ளைகளை பராமரிக்கவும் ஒழுங்குகள் செய்துள்ளேன். ஈழநாடு ஆதரவில் இரங்கும் இல்லத்தினரால் நடாத்தப்படும் இந்தக்  கலைஞர்கள் கூடலுக்குத் தாங்கள் குடும்பத்தினருடன் சமூகம் தந்து சிறப்பிப்பீர்களென நம்புகிறேன்….!“

-சில மாதங்களுக்கு முன்பு (1992இல்) அன்பர் திரு ஸ்ரீபதி அவர்களின் அழைப்புக் கிடைத்திருந்தது. வாழும்போதே கலைஞர்களைக் கௌரவிக்கும் பணி உயரியது. வளரும் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பது. இன்று இலைமறை காய்களாய் (ஸ்ரீபதியின் தமிழில் மலர்களாக) பரவிக் கிடக்கும் அத்தனை கலைஞர்களையும் ஒன்றுதிரட்டும் பணி அத்தனை சுலபமானதா? சிரமமான இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துமுடித்திருக்கிறார் திரு ஸ்ரீபதி.

அந்த மாலைப்பொழுது அறிவிப்பாளர் ஜெகனின் அழகு தமிழில் ஆனந்தமாக ஆரம்பித்தது. பிஞ்சுக் கலைஞர்களிலிருந்து கனிந்த கலைஞர்கள்வரை கலந்துகொண்ட அந்த மண்டபம் ஒரு கலைத்கூடமாகவே காட்சிதந்தது.

„…இந்த மண்டபத்தில் நிற்கும்போது யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நின்று உரையாடிக் கொண்டிருப்பதுபோன்ற உணர்வு தோன்றுகிறது! ஏன்று தலைமை உரையில் குறிப்பிட்டார் ஈழநாடு ஆசிரியர் எஸ்.எஸ்.குகநாதன்.

மேலை நாட்டவர்கள் நமது கலை கலாச்சாரங்களைப் பின்பற்ற முனையும் இக்காலக் கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்கின்ற நம்மவர்களில் பலர் மேலைத்தேசத்தவரின் நாகரீகத்தைப் பின்பற்ற முனைவது வேதனைக்குரியது!“  என்றும் அவர் குறிப்பிட்டார்.
கலை கலாச்சாரங்களை வளர்த்தெடுக்க முனையும் கலைஞர்கள் மத்தியில் அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். சமுதாயத்தில் மாற்றங்களைக் கொணர கலைஞர்களால் முடியும். நம்மோடு பின்னிப் பிணைந்துவிட்ட நமது மொழி கலை கலாச்சாரங்களுக்:கு நாம் வாழும் நாடுகளில் எத்தகைய இடத்தைப் பெற்றுத்தரப் போகிறோம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

„இப்போது கலைஞர்கள் சந்திப்பில் கலந்துகொண்டவர்களைத் தவிர இங்கு சமூகமளிக்காத ஏனைய கலைஞர்கள் பற்றிய விபரங்களையும் திரட்டி கலைஞர்களின் விபரங்களடங்கிய சஞ்சிகையின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட ஆவன செய்யப்படவேண்டும்“ என்று கலைவிளக்கு சஞ்சிகையின் ஆசிரியர் திரு பாக்கியநாதன் அவர்கள் குறிப்பிட்டார்.

அனைத்துக் கலைஞ்களையும் அணிதிரட்டி ஈழ அகதிகளின் இன்னல் துடைக்க இரங்கும் இல்லத்தின்மூலம் செயலாற்றிவரும் திரு ஸ்ரீபதி அவர்களுக்கு ஒவ்வொரு கலைஞரும் கைகொடுக்க வேண்டும் அவர்தம் சேவை சிறக்க வாழ்த்துரைக்கவேண்டும்.

திரு ஸ்ரீபதி அவர்களுக்கு இத்துறையில் பெருமளவு ஒத்தழைப்பு நல்கிவரும் கவிஞர் முகில்வாணன் அவர்களுக்கும் பூவரசு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

பூவரசு இனிய தமிழ் ஏட்டின்மூலம் எழுத்தளவில் நான் சந்தித்துக்கொண்ட சகோதர சஞ்சிகையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பலரை முகம்காண வைத்த கலைக்காவலன் ஸ்ரீபதி அவர்களுக்கும் இரங்கும் இல்லத்துக்கும் நன்றி

-இந்துமகேஷ்
(பிரசுரம்: பூவரசு கார்த்திகை- மார்கழி 1992)









Mittwoch, 20. September 2017

நான் சொல்ல வந்ததும் சொல்லாமல் வந்ததும்!



-இந்துமகேஷ்

வெற்றி நிலா முற்றம் 2017
விருதும் விருந்தும் 

                                          




கடந்த மாதம் (ஆவணி 2017) வெற்றிமணி தனது 250வது இதழை வெளியிட்டிருந்தது. ஆரவாரம் எதுவுமின்றி அது வெளிவந்தபோதும் அதுகுறித்து வெற்றிமணியின் படைப்பாளர்களும் வாசகர்களும் பேரானந்தம்
கொள்ளத் தவறவில்லை.

பல்கலைச் செல்வர் கலாநிதி மு.க.சு.சுpவகமாரன் (கண்ணா) அவர்களது கடின உழைப்பையும் விடாமுயற்சியையும்  வெளிப்படுத்திய வெற்றிமணியின் வளர்ச்சி குறித்து படைப்பாளர்கள் வாசகர்கள் என்று எங்கள் எல்லோருக்குமே புளுகம்தான்.

„இந்த ஆண்டு வெற்றிமணி விழா விருதும் விருந்துமாக நிகழவிருக்கிறது கட்டாயம் வந்து கலந்துகொள்ளவேண்டும்!“  என்று அன்புக்கட்டளை பிறந்தது கண்ணாவிடமிருந்து. வழக்கம்போல் வெற்றிமணி படைப்பாளர்கள் கலைஞர்கள் வாசகர்கள் என்று பலருக்கும் விருந்தளிப்பதோடு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கவிருக்கிறது! வெற்றிமணியின் மூத்த படைப்பாளி என்றவகையில் இந்த வைபவத்தில் கலந்துகொள்ளவேண்டும்!“ என்றார் அவர்.

„வெற்றிமணி ஸ்தாபகர் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக மதுரகவி வி. கந்தவனம் அவர்களின் கரங்களால் இலக்கியச் செம்மல் விருதும் அதற்குப்பின்னால் சில வருடங்களில் சிவத்தமிழ் விருதும் எனக்குக் கிடைத்திருக்கிறதே இனி என்ன விருது தரப்போகிறீர்கள்?“ என்றேன்.
„விருது வழங்கும் நிகழ்வுதான். ஆனால் உங்களுக்கல்ல. இப்போது எழுதிக் கொண்டிருக்கும் மூத்த - இளைய படைப்பாளர்களுக்குத்தான் விருதுகள்!“ என்றார் அவர்.

„சரி விருதுதான் இல்லை. விருந்தாவது கிடைக்குமா?“
„விருதும் விருந்தும்தானே விழா!“ என்றார் அவர்.

இம்முறை விழா நேரத்துக்கு சற்று முன்னதாகவே சமூகமளித்திருந்தேன்.
கண்ணாவும் அகரம் ஆசிரியர் இரவீந்திரன் அவர்களும் நிகழ்ச்சி ஒழுங்குகளில் உற்சாகமாக ஈடுபட்டிருந்தார்கள்.

அடுத்த ஓரிரு மணித்தியாலங்களில் விழா ஆரம்பமாயிற்று.
வரவேற்புரைக்கு வந்த கண்ணா, „இன்றைய விழாவின் பிரதம விருந்தினராக வெற்றிமணியின் மூத்த படைப்பாளர் இலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களை வரவேற்கிறேன்!“ என்றார். இது நான் எதிர்பார்க்காத ஒன்று.

இவ்விழாவில் விருது வழங்கும் நிகழ்வுக்கு அதிகநேரம் தேவைப்படுவதால் வாழ்த்துரை வழங்குபவர்கள் தமது உரைகளை 5 நிமிடத்துக்குள் நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் அறிவித்தார் அவர்.
அந்த நேரக்கட்டுப்பாட்டை அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கடமையாற்றிய இரவீந்திரன் முறையாகக் கடைப்பிடித்தார்.

„ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வணக்கம் சொல்லவே 5 நிமிடம் தேவைப்படுமே. அதனால் தனித்தனியாக வணக்கம் சொல்லமாட்டேன்!“
என்று எழுத்தாளரும் பேச்சாளருமான திரு. புத்திசிகாமணியும்,
 „அறிவிப்பாளர் என்னை அறிமுகம் செய்ய 3 நிமிடம் எடுத்துக்கொண்டுவிட்டதால் அந்த 3நிமிடத்தையும நான் மேலதிகமாக எடுத்துக்கொள்கிறேன்!“ என்று எழுத்தாளர் சபேசனும் வேடிக்கையாகக் குறிப்பிட்டாலும் வாழ்த்துரை வழங்கிய ஏலையா ஆசிரியர் முருகதாசன், தமிழருவி ஆசிரியர் நயினை விஜயன், மண் ஆசிரியர் சிவராஜா, எழுத்தாளர்கள்  ஸ்ரீஜீவகன், புத்திசிகாமணி, சபேசன்,  கவிதாயினிகள் நகுலா சிவநாதன் கௌசி சிவபாலன் ஆகியோர் உட்பட அனைவரும் நேரக் கட்டுப்பாட்டுக்கமையவே  தங்கள் வாழ்த்துரைகளை சிறப்புறவே வழங்கியிருந்தார்கள்  

„எனக்கான நேரம் எப்போது?“ என்றேன்
„குறிப்பிட்ட நேரத்துக்கு நான் இரயில் நிலையம் திரும்பவேண்டும்.!“

„எல்லோருக்கும்  விருது வழங்கியபின் உங்களுக்கான நேரம்!“ என்றார் இரவி.
சொன்னதுபோலவே கலைநிகழ்ச்சிகளும் விருதுவழங்கும் நிகழ்வும் நிறைவுக்கு வந்தபின்னர். விருதுபெற்றவர்கள் முன்னிலையில் ஒலிவாங்கியை என்னிடம் தந்தார் இரவி.
„இப்போது நீங்கள் பேசலாம்!“
„ஐந்த நிமிடம்தானே?“
„இல்லை நீங்கள் விரும்பியபடி எவ்வளவுநேரமானாலும்!“

முழுமையாகப் பேசுவதானால் ஆகக்குறைந்தது  ஒருமணி நேரமாவது தேவைப்படும்.   அதுவரை எனக்கான இரயிலும் விழாவுக்கு வருகை தந்தவர்களும் காத்திருக்கப் போவதில்லை என்று புரிந்தது. .
5 நிமிடத்திலேயே முடித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

1950 களில் தாயகத்தில் தளிர்விட்ட வெற்றிமணி மீண்டும் 1990களில் ஜெர்மனியில் பதியமிடப்பட்டு  இன்று வளர்ந்து உலகெங்கும்
கிளைபரப்பி தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களில் இடம்பிடித்து தொடர்ந்தும் உற்சாகமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.

 „வெற்றிமணியா அது என்ன விளம்பரப் பத்திரிகைதானே!“ என்று ஆரம்ப காலங்களில் அதனைச் சாதாரணமாக எடைபோட்டவர்களின்
நினைப்புக்களை வேரறுத்து தமிழ்வாழும் இல்லமெல்லாம் தன் பணியை இளமையாக கவர்ச்சியாக புதுமையாகத் தொடரும் வெற்றிமணி…
தமிழ்க் கலைஇலக்கியத்துக்கு அளப்பரிய தொண்டாற்றிவருகிறது… படைப்பாளிகளுக்குக்  களம் அமைப்பதோடு பல்வகை நூல்களையும்
இசைவடிவங்களையும வெளியிட்டு சாதனை புரிந்து வருகிறது.
வாழும்போதே வாழ்த்தப் பழகுவோம் என்று அனைத்துக் கலைஞர்களையும் வரவழைத்து அரவணைத்து ஆண்டுதோறும விருதளித்து கௌரவிக்கும் அதன் மகத்தான பணி போற்றுதற்குரியது.

தந்தையின் பணியைத் தொடரும் கண்ணாவும் அவரது கலை இலக்கிய சமூகப் பணிகளின் தொடர்ச்சியாய் எதிர்காலத்தின் நட்சத்திரங்களாய்த் திகழும் அவரது மகன் சஞ்சயும் மகள் சிவஜெனனியும் தமிழ்க்கலை இலக்கிய உலகின் வெற்றிமணிகளே!   கலை இலக்கிய ஆர்வலர்களின் வாழ்த்தும் வரவேற்பும் என்றும் அவர்களுக்கு நிலையானது.!“

இப்படித்தான் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்னும் நான் சொல்லவந்ததில் அதிகமானவற்றை நண்பர் முருகதாசன் அவர்கள் உட்பட
 பல வாழ்த்துரையாளர்கள் சொல்லிவிட்டதால் மீளவும் நான் சொல்வது அழகல்ல என்று தவிர்த்துவிட்டேன்.

பொன்னாடைக் கலாச்சாரம்பற்றி கண்ணா என்ன நினைத்துக்கொண்டாரோ அதைத் தவிர்த்துவிட அவர் நினத்திருந்தார் போலும்.
ஆனால் கால காலமாக நம் பண்பாட்டு வழக்கில் வரும் பொன்னாடைக் கலாச்சாரத்தை புறந்தள்ளுதல் அழகல்ல என்று எனக்குத் தோன்றிற்று.
ஒருசில இடங்களில் அவசியமற்ற தோள்களுக்கு பொன்னாடைகள் போய்விடுகின்றன என்பதற்காக அவை புறக்கணிக்கப்படவேண்டியன அல்ல.
வாழ்த்தப்படவேண்டியவர்களை வாழ்த்தும் நெஞ்சமும் வாழ்த்தப்பட வேண்டியதுதான்.
அதை வாழ்த்துவதற்காகவே கண்ணாவுக்கு படைப்பாளர்கள் சார்பில் நானும்
வெற்றிமணியின் வாசகர்கள் சார்பில் நண்பர் செல்வக்குமாரும் அவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.
தமிழ்க் கலை உலகுக்கு வெற்றிமணியின் சேவையும் தேவையும் அதிகம் உண்டு என்பதை அவருக்குத் தெரியப்படுத்தவே அந்தப் பொன்னாடை.


முக்கிய குறிப்பு:
விருதும் விருந்தும் நிகழ்வில் வெற்றிமணியின் இளைய படைப்பாளர்கள் என்று சில புதுமுகங்களைக கண்டேன்.
45 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நானும் கண்ணாவும் போல் அவர்கள் தெரிந்தார்கள். வெற்றிமணியை எழுத்துக்களால் அலங்கரிக்க
அவர்கள் இருக்கிறார்கள்.
வெற்றிமணியின் 100வது ஆண்டுமலரில் அவர்கள் எனது இந்தக் கட்டுரையை மீள்பதிப்புச் செய்வார்கள்என்று நம்புகிறேன்.