Montag, 23. April 2007

வசந்தத்தில் ஓர் நாள்!























என் வாழ்க்கைப் பயணத்தின் இரண்டாவது பத்தாண்டு 1960களில் தொடங்கிற்று
1960களிலிருந்து 1970வரையிலான காலகட்டம் - பாலர்பருவத்துக்கும் வாலிபப்பருவத்துக்கும் இடையிலான பருவம்தொடங்கி- இருபதுவயது வாலிபனாக நான் மாறிக்கொண்டிருந்த இளமைக்காலங்கள்.
அந்தக் காலகட்டத்தில் என்னைப்போல் சிறுவர்களாக இளைஞர்களாக இருந்தவர்கள் தமிழ்க் கலை இலக்கிய
உலகத்தின் ஒருபொற்காலத்தில் வாழ்ந்ததாகப் புளகாங்கிதம் கொள்ளலாம்.
இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலும் வித்தகர்கள் பலர் தமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும்
முன்னணியில் நின்று முகம்காட்டிய பொழுதுகள் அவை. தமிழ்க் கலை இலக்கிய உலகம் எண்ணற்ற கலை இலக்கியவாதிகளை அறிமுகம்கொண்ட காலம் அது என்று தயங்காமல் சொல்வதற்கு சாட்சியங்களாக ஏராளமான கலை இலக்கியப்படைப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன.
இன்றைக்கும் அந்தக் காலகட்டத்தை வியந்துரைக்கிற பலரை நாம் காணலாம்.
பழமை என்றும் இனிமை என்று இன்று பலரால் பகிரப்படுகின்ற எத்தனையோ கலைவடிவங்கள்
புத்தம்புதியனவாய் மணம்பரப்பியது அந்தக் காலகட்டத்தில்தான்.!
அந்தப் பத்தாண்டுகளின் ஆரம்ப வருடங்கள்....
உலகம் புரிகிற சிறுவனாய் உருமாறிக்கொண்டிருந்தேன் நான்
மழைக் காலம் தொடங்கியிருந்தது!
பள்ளக் காணிகளில் வெள்ளம் தேங்கி நிற்க, ஒழுங்கைகளுக்குள்ளும் மேட்டிலிருந்து பள்ளம்நோக்கி
வெள்ளம் வடிந்தோடிக் கொண்டிருந்தது..
வீட்டிலிருந்து புறப்பட்டால் பள்ளிக்கூடம் போவதற்குள் கால்கள் விறைத்துப் போய்விடும்.
அன்றைக்கும் சரியான அடைமழை..
மத்தியானம் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது, சற்று ஓய்ந்திருந்த மழை, இடைவழியில் சடாரெனப் பொழிந்து என்னை நன்றாகவே குளிப்பாட்டிவிட்டிருந்தது.
பெண்கள் அணியும் அரைப்பாவாடையைப்போல் முழங்கால்வரை தொளதொளக்கும் அரைக் காற்சட்டையும் முழங்கைகளைத் தொடும் அரைக்கைச் சட்டையும் மழைநீரில் ஊறிக் கனத்தன.
மழையில் நனைந்துவிடாதிருக்க புத்தகங்களை சட்டைக்குள் நுழைத்து நெஞ்சோடு
அணைத்துப் பிடித்தும் ஈரம் கசகசத்தது.
எட்டி நடக்க முடியாமல் ஈரக் காற்சட்டை இடைஞ்சல் கொடுத்தது.என்றாலும் நடையில் வேகம் காட்டினேன்.
காலையில் பள்ளிக்கூடத்தில் சாப்பிட்ட ஒரு பணிஸ், குடித்த ஒருபேணி பால் இரண்டும் விரைவாகவே
செமிபாடடைந்திருந்தன.
வயிறு மெல்லிதாய்க் கிள்ளத் தொடங்கியிருந்தது.
வீட்டுப் படலையை நெருங்கியபோது பின்னால் விசில் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன்.
மழைக்கோட்டுப் போட்டிருந்த தபால்காரர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்தார்.
மழைக்குள் நனையாதவாறு தபால் பைக்குள் மறைத்துவைத்திருந்த காகிதக் கட்டொன்றை எடுத்து
"இந்தா!" என்று என்னிடம் தந்தார்.
கையில் வாங்கும்போதே புரிந்துவிட்டது. அது கொழும்பிலிருந்து பெரியண்ணா அனுப்பிய கல்கி வார இதழ்கள்.
என் அக்கா கல்கியின் தீவிர வாசகி.
கல்கியின் எழுத்துக்களென்றால் உயிர் என்கிற மாதிரியானதொரு இரசனை.
அப்பாவுக்குப் பிறகு எனக்கு கதைசொல்வது அக்காதான்.
ஆனால் அக்காவின் கதைகள் புதிய எழுத்தாளர்கள் எழுதுகிற புதிய கதைகளாக இருக்கும். பெரும்பாலும்
கதைச் சுருக்கங்களே.
தொடக்கத்தில் அக்காவுக்காகவே கொழும்பிலிருந்து கல்கி குமுதம் ஆனந்த விகடன் என்று அண்ணா
அனுப்பிக் கொண்டிருந்தார்.
அக்காவின் புத்தகப் பைத்தியம் என்னையும் தங்கச்சியையும் தொற்றிக்கொண்டது.
சிறுவர்களுக்கான கதைகள், பாட்டுக்கள் என்று எல்லாப் புத்தகங்களிலும் தேடித் தேடி வாசிக்கப் பழகிக்கொண்டோம்.
கல்கியில் வெளியான தங்கமாம்பழம் மாயப்பந்து போன்ற கதைகள் எங்களைக் கவர்ந்துகொள்ள
அவ்வப்போது கையில் கிடைக்கும் புத்தகங்களை யெல்லாம் புரட்டிப் புரட்டி சிறுவர் பகுதிகளைத் தேட ஆரம்பித்தோம்.
சித்திரக்கதைகள் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்ளத் தொடங்கின.
இப்படியொரு காலகட்டத்தில் தான் இந்தக் கல்கி இதழ்களும் வந்தன..
தபால்காரர் தந்த புத்தகங்களோடு வீட்டுக்கு ஓடி அவசர அவசரமாக ஈரக் "களிசானையும்" "சேட்"டையும் களைந்து இன்னொரு தொளதொள களிசானை உடுத்திக்கொண்டு கல்கியைப் பிரித்து அதில் மூழ்கிப்போனேன்.
வெளியே மழையின் சலசலப்பு..
குசினிக்குள் சமைத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் சமையலின் வாசம்... சற்று முன்பு வயிற்றைக் கிள்ளிய பசி... எல்லாம் மறந்துபோக-
கல்கியோடு நான்...!
அப்பா என் அருகில் இருந்து அவர் எழுதாத கதைகளைச் சொல்லித் தந்ததுபோல -
கதைகளை எழுதியவர்கள் அருகில் இல்லாமல் அவர்கள் சொல்லும் கதைகளுக்குள் நான் இலயித்துப் போயிருந்தேன்..
யார் எழுதினார் என்ன எழுதினார் என்றில்லாமல் எழுத்துக்களில் மட்டுமே மூழ்கிப்போன காலங்கள் அவை.
"கல்கி ஆசிரியர்தான் "கல்கி" என்ற பெயரில் கதை எழுதிறவர்!" என்று அக்கா சொல்லுவா.
"நல்லா எழுதுவார்.. அவரின்ரை கதையளை எடுத்துப் படிக்க வெளிக்கிட்டால் முடிக்காமல் வைக்க மனம்வராது!" என்பா.
"கல்கி எண்டால் என்னக்கா அர்த்தம்?"
"கல்யாணசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி எண்ட இரண்டு பேரின்ரை சுருக்கம்தான் கல் கி!" என்றா அக்கா.

 Bild könnte enthalten: 1 Person, Meme und Text




"மகாபாரதத்திலை கல்கி அவதாரம் எண்டு ஒண்டு வருகுதெல்லே..நான் அதாக்கும் எண்டு நினைச்சன்!"
"ம்.. அப்பிடியும் சொல்லலாம்... தசாவதாரத்திலை கடைசி அவதாரம் கல்கி அவதாரம்தான்!"
"அதுக்குப்பிறகு உலகம் இருக்காதாம்!"
"ஆர் சொன்னது அப்பிடி... உலகத்திலை பிரளயங்கள் வரும் ஆனா உலகம் அழியாது! கெட்டவையள்
அழிஞ்சு நல்லவையள்மட்டும் இந்த உலகத்திலை இருப்பினம்!"
"அப்ப இப்போதைக்கு பிரளயம் வராது அக்கா.. ஏனெண்டால் இப்ப எல்லாரும் நல்லவைதானே
இருக்கினம்..?"என்றேன்.
அக்கா சிரித்தா.
"கல்கி அவதாரம் வருகுதோ இல்லையோ கல்கி புத்தகம் தொடர்ந்து வரும்!" என்றேன் நான்.

-சின்னாச்சியின்ரமோன்

G

Donnerstag, 19. April 2007

பிள்ளையார் சுழி.

தெற்குப் பார்த்த வீடு.
வீட்டின் தெற்குப்புற வேலிக்கு அப்பால் சில யார் தொலைவில்..
கண்ணகியம்மன் கோயிலின் வடக்கு வீதி.
கோயிலுக்குத் தெற்குவீதிப்பக்கமாய் அலை எறிந்து விளையாடும் கடல்.
வீட்டுக்கு மேற்குப் புறக் காணிக்குள் காய்கறித்தோட்டம்.
சோலையென வீட்டைச் சுற்றியிருந்த தென்னைமரங்களுக்குக் குழந்தைகள்போல் சின்னச் சின்னத் தென்னங் கன்றுகள் காய்கறித் தோட்டத்திடையே கீற்றுத் தலையசைத்துச் சிரிக்கின்றன.
சில காலத்துக்கு முன்புதான் அவைகளை அங்கே நாட்டி வைத்திருந்தார் சின்னையர்.

58 இனக் கலவரத்தோடு, குருநாகலயில் நடத்திக்கொண்டிருந்த வியாபாரத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு, கொழும்பிலும் இரத்தினபுரியிலுமாய் பணிபுரிந்து கொண்டிருந்த 3மகன்களையும் அழைத்துக்கொண்டு கப்பலில் ஊர் வந்தவர்தான்.
அதற்குப் பிறகு குருநாகலக்குத் திரும்ப அவரது ரோஷம் இடம்கொடுக்காததால் சொந்த ஊரிலேயே நிரந்தரமானார்.
பிள்ளைகள்மட்டும் மறுபடி ரயிலேறி கொழும்புக்குப் போய்விட்டார்கள்.

58இல் அவருக்கு 56 வயது நிறைந்திருந்தது.
மூத்த மகளும் திருமணம் செய்துகொண்டு கணவருடன் யாழ்ப்பாணத்துக்குப் போயிருந்தாள்.ஆண்4, பெண்2 என்று பெற்றவர் அவர்.
இப்போது கடைக்குட்டிப் பையனும் அவனுக்கு இளைய ஒருபெண்ணும்-முறையே 9வயதிலும் 7வயதிலும்.

மனைவியோடும் இரண்டு பிள்ளைகளோடும் அவர் வாழ்வு அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது.

அது ஒருமாலைப்பொழுது.
முற்றத்தில் ஒரு சாக்குக் கட்டிலைப்போட்டு அதன் மீது பாய்விரித்து அதில் படுத்துக் கிடந்தபடி பக்கத்தில் நின்றிருக்கும் தென்னைமரங்களின் ஓலைகள் காற்றில் அசையும் அழகையும் அதனூடே தலைகாட்டும் நிலாவையும் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தார் அவர்.
திடீரென ஓடிவந்து அவருக்கு அருகில் படுத்துக்கொண்ட அவரது சின்ன மகன் அவரது வெற்று மார்பை தன் மெலிந்த கரங்களால் இறுகக் கட்டிக்கொண்டு அவரது முகம்பார்த்துக் கேட்டான்:
"ஒரு கதை சொல்லுங்க அப்பு!"
(அப்போதெல்லாம் அப்பாவை அப்பு என்றே அழைக்கப் பழக்கப்பட்டிருந்தான் அவன்)
"கதையோ..?"
"ம்..கதைதான்!"
" என்னகதை..?"
"என்னெண்டாலும்.. ஏதேனும் ஒரு கதை!.. உங்களுக்குத்தான் நிறையக் கதையள் தெரியுமே!"
"சரி..சொல்கிறன் கேள்..!.. ஒரு காட்டிலை ஒரு சிங்கம்!"
" என்ன சிங்கமும் முயலும் கதையா..?"
" இல்லை சிங்கமும் எலியும்!"
"அந்த எலி வலையறுத்த கதைதானை!"
"ம்..!"
"இதெல்லாம் முந்திச் சொல்லீற்றீங்கள்..வேறை கதை ஏதேனும் பெரிய கதை சொல்லுங்கோ!"
"பெரிய கதை எண்டால்.. உனக்குப் பாரதக் கதைதான் சொல்லவேணும்!"
"சரி சரி சொல்லுங்கோ!"
"ஆனால் இந்தக் கதையை ஒருநாளையிலை சொல்ல முடியாது.. கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் சொல்லுவன்.!"
"ம்..!"
"ஒரு காலத்திலை ... வேதவியாசர் எண்டொரு முனிவா்...!"

கதை ஆரம்பமாயிற்று. மகாபாரதக் கதை.
கதையில் வரும் பாத்திரங்களும் நாடுநகரங்களும் சம்பவக் கோர்வைகளும் ஒரு புத்தகம் படிப்பதுபோல்...
"இவளவத்தையும் என்னமாதிரிப் பாடமாக்கி வைச்சிருக்கிறார்!" என்ற ஆச்சரியம் சின்னமகனுக்கு.
அவ்வப்போது கதை தொடர்ந்தது.
கதைக்குள் கதையாய்... கிளைக் கதைகள்..

"அப்பு"விடம் அடிக்கடி கேட்ட கதைகள் இவனுள்ளும் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கிவிட்டிருந்தன.
கதைகேட்பது படிப்பது போன்று கதை எழுதுவதும் ஒரு இனிமையான அனுபவம் என்று உணர்ந்தான் இவன்.


ம்...
என் எழுத்துப் பயணத்தில் பிள்ளையார் சுழி போட்டாயிற்று.
நிலாக்காலங்களில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு என்தந்தையிடம் நான் கதைகேட்ட அந்தக்காலங்கள்..
எழுதுபவர்கள்மட்டும்தான் எழுத்தாளர்களா..?
எழுத்துவடிவம் பெறாத எத்தனையோ கதைகளை கர்ணபரம்பரைக் கதைகளாக செவிவழி உலாவவிட்டவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் இல்லையா?

எழுதாத ஒரு எழுத்தாளனாய் என்னுள்ளிருந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன்-
என்தந்தை!

கதைகேட்கும் பருவத்திலிருந்து கதைவாசிக்கும் பருவம் வந்தது. பெட்டகத்துக்குள்ளிருந்து பெரிய எழுத்து மகாபாரதக்கதையை (அப்பாடி எவ்வளவு பாரம்?) எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கியாயிற்று.

மகாபாரதம் நடந்தபோது நானும் அங்கே இருந்தேன் என்று இப்போதும்என்னை நினைக்க வைக்கிறமாதிரி அந்த உலகத்திலேயே வாழ வைக்கிற எழுத்துக்கள்.


வாசகனாக மாறியது சரி..
எப்போது நான் எழுதத் தொடங்கினேன்...?
மீசைகூட அரும்பாத பருவத்தில் ஐந்தாம் வகுப்புப் படிக்கிற நேரத்தில் கதை என்று ஏதோ எழுதி என்பள்ளித் தோழன் சிவநாதனிடம் கொடுக்க--
எனக்கு அரிச்சுவடி சொல்லிக்கொடுத்த- சின்னத்துரை வாத்தியார் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் சிவநாதன் அதை வாசித்துக்கொண்டிருக்க -
மூக்குக் கண்ணாடியை உயர்த்தி அவனைப் பார்த்து கையிலிருந்த பிரம்பால் மேசையில் ஒரு தட்டுத்தட்டி -
"என்ன அது.. கொண்டு வா இங்கை!" என்று அதட்ட-
சிவநாதன் ஒரு பயமுமில்லாமல் அதை அவரிடம் கொண்டுபோய்க் கொடுத்து -
"மகேசன் எழுதின கதை!" என்றான்.
"கதையோ..?" என்றவர் சூட்டோடு சூடாக அதைப் புரட்டிப் படிக்க ஆரம்பித்தார்.

எனக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது.
(சின்னத்துரை வாத்தியாரிடம் ஒருநாளும் நான் அடிவாங்கினதில்லை. ஆனால் மற்றவர்கள் வாங்கும்போது அந்த அடியின் வலியை நானும் உணர்ந்திருக்கிறேன். இன்றைக்கு எனக்கும் சாத்தல்தான் என்பதுபோல் சிவநாதனைக் கிள்ளினேன். "ஏண்டா குடுத்தனி?"என்றேன். அவன் சிரித்தான். )

நான் எழுதினது என்னமோ ராசா ராணிக் கதைதான் என்றாலும் அதில் காதல் வேறு.

கதைச்சுருக்கம் இன்னும் நினைவில் நிற்கிறது.

இரண்டு நாடுகளுக்குப் பகை.
ஒரு ராசாவின் மகள் மற்ற ராசாவின் மகனைக் காதலிக்கிறாள்.
இருவரும் கந்தர்வமணம் புரிந்துகொள்கிறார்கள்.
இரண்டு ராசாக்களும் தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தங்கள் பகையை மறந்து ஒன்று சேர்கிறார்கள்.

மீசைமுளைக்காத பொடியன் காதல் கத்தரிக்காய் என்று கதை எழுதி அதை அ.. ஆவன்னா சொல்லிக்குடுத்த வாத்தியாரிடமே காட்டுவதென்றால்...
வாத்தியார் என்ன சொல்வாரோ...

ஒருவித பரபரப்புடன் இருந்தேன்.
"இங்கை வாடா..!"சிவநாதனை அழைத்தார் வாத்தியார்.
"இந்தா... இதை அவனிட்டைக்குடு!"
நான் அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவரது முகத்தில் ஒரு புன்சிரிப்பு தவழ்ந்தது.
"ம்.. நல்லாத்தான் எழுதிறை!"

அ..ஆ.. சொல்லித்தந்த அந்த வாத்தியார் எனக்களித்த ஆசீர்வாதம் அது.
நான் வானத்தில் பறப்பதுபோல் உணர்ந்தேன்.
மாதா பிதா குரு தெய்வம்!

-சின்னாச்சியின்ரமோன்.

Sonntag, 15. April 2007

முதுமை தனிமை இனிமை

என் இதயத்தில் தங்கள் பெயர்பதித்துப் போனவர்களும்
பெயர் பதித்துக கொண்டிருப்பவர்களுமாக..
முன்பின் எனக்கு நேரில் அறிமுகமில்லாத மனிதர்களும்,
எப்போதோ எங்கோ நேரடியாக சந்தித்துப் போனபோது முக அறிமுகம் கொண்டவர்களுமாய்..
அடிக்கடி என் நினைவில் வந்துபோகின்றவர்களை எண்ணிப் பார்க்கும் பெரும்பாலான பொழுதுகளில் எல்லாம் ஒருவிதத் தனிமை!

தனியாக இருக்கிறேன் ஆனால் தனியாக இல்லை என்பதுபோல் என்னுள் அவர்கள் தங்களோடு என்னை இணைத்துக் கொள்கிறார்கள்.
என் நினைவில் அவர்கள் உலாவரும்போது அந்தக் காலங்களும் நிகழ்காலங்களாய்
மனத்துள் படம்காட்டத் தொடங்கிவிடுகின்றன.

முதுமையும் அதனோடிணையும் தனிமையும்..

எண்ணற்ற மனிதர்களைக் கண்டுவிட்ட இந்த உலகம் முதுமைவரை எல்லோரையும் விட்டு வைப்பதில்லை.
மொட்டுக்களாய் மலர்களாய் பிஞ்சுகளாய் காய் கனிகளாய் இடையிலே பறிக்கப்பட்டவர்களே ஏராளம்.
இதில் முதுமை கண்டவர்களும் அந்த முதுமையிலே தனிமை கண்டவர்களும்
அந்தத் தனிமையிலே இனிமை கண்டவர்களும் உலகில் வந்துபோன மனிதர்களின் எண்ணிக்கையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகச்சொற்பமே.

"...கடந்தகாலமோ திரும்புவதில்லை
எதிர்காலமோ அரும்புவதில்லை
நிகழ்காலமோ விரும்புவதில்லை
இதுதானே அறுபதின்நிலை!..."


என் இருபதுகளில் நான் கேட்ட பாட்டு
இப்போதும்... அறுபதை நெருங்கும்போதும்...

ஆனால் மெய்தானா அது?

கடந்தகாலமோ எதிர்காலமோ என்றில்லாமல் எப்போதும் நிகழ்காலமாகவே காண்கிறேன் நான்

பள்ளிச் சிறுவனாய் பால பாடம் பாலபோதினி என்று பாடப்புத்தகங்களுடன் ஆரம்பித்த காலங்கள் என் நினைவுகளில் இப்போது நிகழ்காலமாய்...

அம்மாவின் மடியிலிருந்து கீழிறங்கி நான் மண்ணழைந்த நிலமாய்
சூழ்கடலின் நடுவே படுத்திடுக்கும் ஒரு சுந்தரத் தீவாய்...
என் புங்குடுதீவு.

அ..ஆ..இ...என்று நான் உச்சரித்து அரிச்சுவடி தொடங்கிய
இராஜராஜேஸ்வரி வித்தியாசாலைக்குள் முதல்நாள் அடியெடுத்து வைக்கிறேன்..

சின்னத்துரை வாத்தியார் அவர்கள் ஏடுதுவக்கி ஆரம்பித்து வைக்கிறார்..

பனையோலை ஏட்டில் பதித்த அகரமுதலாம் எழுத்துக்களோடு
பள்ளியிலிருந்து வருகிறேன்...

-சின்னாச்சியின்ரமோன்