என் இதயத்தில் தங்கள் பெயர்பதித்துப் போனவர்களும்
பெயர் பதித்துக கொண்டிருப்பவர்களுமாக..
முன்பின் எனக்கு நேரில் அறிமுகமில்லாத மனிதர்களும்,
எப்போதோ எங்கோ நேரடியாக சந்தித்துப் போனபோது முக அறிமுகம் கொண்டவர்களுமாய்..
அடிக்கடி என் நினைவில் வந்துபோகின்றவர்களை எண்ணிப் பார்க்கும் பெரும்பாலான பொழுதுகளில் எல்லாம் ஒருவிதத் தனிமை!
தனியாக இருக்கிறேன் ஆனால் தனியாக இல்லை என்பதுபோல் என்னுள் அவர்கள் தங்களோடு என்னை இணைத்துக் கொள்கிறார்கள்.
என் நினைவில் அவர்கள் உலாவரும்போது அந்தக் காலங்களும் நிகழ்காலங்களாய்
மனத்துள் படம்காட்டத் தொடங்கிவிடுகின்றன.
முதுமையும் அதனோடிணையும் தனிமையும்..
எண்ணற்ற மனிதர்களைக் கண்டுவிட்ட இந்த உலகம் முதுமைவரை எல்லோரையும் விட்டு வைப்பதில்லை.
மொட்டுக்களாய் மலர்களாய் பிஞ்சுகளாய் காய் கனிகளாய் இடையிலே பறிக்கப்பட்டவர்களே ஏராளம்.
இதில் முதுமை கண்டவர்களும் அந்த முதுமையிலே தனிமை கண்டவர்களும்
அந்தத் தனிமையிலே இனிமை கண்டவர்களும் உலகில் வந்துபோன மனிதர்களின் எண்ணிக்கையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகச்சொற்பமே.
"...கடந்தகாலமோ திரும்புவதில்லை
எதிர்காலமோ அரும்புவதில்லை
நிகழ்காலமோ விரும்புவதில்லை
இதுதானே அறுபதின்நிலை!..."
என் இருபதுகளில் நான் கேட்ட பாட்டு
இப்போதும்... அறுபதை நெருங்கும்போதும்...
ஆனால் மெய்தானா அது?
கடந்தகாலமோ எதிர்காலமோ என்றில்லாமல் எப்போதும் நிகழ்காலமாகவே காண்கிறேன் நான்
பள்ளிச் சிறுவனாய் பால பாடம் பாலபோதினி என்று பாடப்புத்தகங்களுடன் ஆரம்பித்த காலங்கள் என் நினைவுகளில் இப்போது நிகழ்காலமாய்...
அம்மாவின் மடியிலிருந்து கீழிறங்கி நான் மண்ணழைந்த நிலமாய்
சூழ்கடலின் நடுவே படுத்திடுக்கும் ஒரு சுந்தரத் தீவாய்...
என் புங்குடுதீவு.
அ..ஆ..இ...என்று நான் உச்சரித்து அரிச்சுவடி தொடங்கிய
இராஜராஜேஸ்வரி வித்தியாசாலைக்குள் முதல்நாள் அடியெடுத்து வைக்கிறேன்..
சின்னத்துரை வாத்தியார் அவர்கள் ஏடுதுவக்கி ஆரம்பித்து வைக்கிறார்..
பனையோலை ஏட்டில் பதித்த அகரமுதலாம் எழுத்துக்களோடு
பள்ளியிலிருந்து வருகிறேன்...
-சின்னாச்சியின்ரமோன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen