Donnerstag, 19. April 2007

பிள்ளையார் சுழி.

தெற்குப் பார்த்த வீடு.
வீட்டின் தெற்குப்புற வேலிக்கு அப்பால் சில யார் தொலைவில்..
கண்ணகியம்மன் கோயிலின் வடக்கு வீதி.
கோயிலுக்குத் தெற்குவீதிப்பக்கமாய் அலை எறிந்து விளையாடும் கடல்.
வீட்டுக்கு மேற்குப் புறக் காணிக்குள் காய்கறித்தோட்டம்.
சோலையென வீட்டைச் சுற்றியிருந்த தென்னைமரங்களுக்குக் குழந்தைகள்போல் சின்னச் சின்னத் தென்னங் கன்றுகள் காய்கறித் தோட்டத்திடையே கீற்றுத் தலையசைத்துச் சிரிக்கின்றன.
சில காலத்துக்கு முன்புதான் அவைகளை அங்கே நாட்டி வைத்திருந்தார் சின்னையர்.

58 இனக் கலவரத்தோடு, குருநாகலயில் நடத்திக்கொண்டிருந்த வியாபாரத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு, கொழும்பிலும் இரத்தினபுரியிலுமாய் பணிபுரிந்து கொண்டிருந்த 3மகன்களையும் அழைத்துக்கொண்டு கப்பலில் ஊர் வந்தவர்தான்.
அதற்குப் பிறகு குருநாகலக்குத் திரும்ப அவரது ரோஷம் இடம்கொடுக்காததால் சொந்த ஊரிலேயே நிரந்தரமானார்.
பிள்ளைகள்மட்டும் மறுபடி ரயிலேறி கொழும்புக்குப் போய்விட்டார்கள்.

58இல் அவருக்கு 56 வயது நிறைந்திருந்தது.
மூத்த மகளும் திருமணம் செய்துகொண்டு கணவருடன் யாழ்ப்பாணத்துக்குப் போயிருந்தாள்.ஆண்4, பெண்2 என்று பெற்றவர் அவர்.
இப்போது கடைக்குட்டிப் பையனும் அவனுக்கு இளைய ஒருபெண்ணும்-முறையே 9வயதிலும் 7வயதிலும்.

மனைவியோடும் இரண்டு பிள்ளைகளோடும் அவர் வாழ்வு அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது.

அது ஒருமாலைப்பொழுது.
முற்றத்தில் ஒரு சாக்குக் கட்டிலைப்போட்டு அதன் மீது பாய்விரித்து அதில் படுத்துக் கிடந்தபடி பக்கத்தில் நின்றிருக்கும் தென்னைமரங்களின் ஓலைகள் காற்றில் அசையும் அழகையும் அதனூடே தலைகாட்டும் நிலாவையும் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தார் அவர்.
திடீரென ஓடிவந்து அவருக்கு அருகில் படுத்துக்கொண்ட அவரது சின்ன மகன் அவரது வெற்று மார்பை தன் மெலிந்த கரங்களால் இறுகக் கட்டிக்கொண்டு அவரது முகம்பார்த்துக் கேட்டான்:
"ஒரு கதை சொல்லுங்க அப்பு!"
(அப்போதெல்லாம் அப்பாவை அப்பு என்றே அழைக்கப் பழக்கப்பட்டிருந்தான் அவன்)
"கதையோ..?"
"ம்..கதைதான்!"
" என்னகதை..?"
"என்னெண்டாலும்.. ஏதேனும் ஒரு கதை!.. உங்களுக்குத்தான் நிறையக் கதையள் தெரியுமே!"
"சரி..சொல்கிறன் கேள்..!.. ஒரு காட்டிலை ஒரு சிங்கம்!"
" என்ன சிங்கமும் முயலும் கதையா..?"
" இல்லை சிங்கமும் எலியும்!"
"அந்த எலி வலையறுத்த கதைதானை!"
"ம்..!"
"இதெல்லாம் முந்திச் சொல்லீற்றீங்கள்..வேறை கதை ஏதேனும் பெரிய கதை சொல்லுங்கோ!"
"பெரிய கதை எண்டால்.. உனக்குப் பாரதக் கதைதான் சொல்லவேணும்!"
"சரி சரி சொல்லுங்கோ!"
"ஆனால் இந்தக் கதையை ஒருநாளையிலை சொல்ல முடியாது.. கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் சொல்லுவன்.!"
"ம்..!"
"ஒரு காலத்திலை ... வேதவியாசர் எண்டொரு முனிவா்...!"

கதை ஆரம்பமாயிற்று. மகாபாரதக் கதை.
கதையில் வரும் பாத்திரங்களும் நாடுநகரங்களும் சம்பவக் கோர்வைகளும் ஒரு புத்தகம் படிப்பதுபோல்...
"இவளவத்தையும் என்னமாதிரிப் பாடமாக்கி வைச்சிருக்கிறார்!" என்ற ஆச்சரியம் சின்னமகனுக்கு.
அவ்வப்போது கதை தொடர்ந்தது.
கதைக்குள் கதையாய்... கிளைக் கதைகள்..

"அப்பு"விடம் அடிக்கடி கேட்ட கதைகள் இவனுள்ளும் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கிவிட்டிருந்தன.
கதைகேட்பது படிப்பது போன்று கதை எழுதுவதும் ஒரு இனிமையான அனுபவம் என்று உணர்ந்தான் இவன்.


ம்...
என் எழுத்துப் பயணத்தில் பிள்ளையார் சுழி போட்டாயிற்று.
நிலாக்காலங்களில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு என்தந்தையிடம் நான் கதைகேட்ட அந்தக்காலங்கள்..
எழுதுபவர்கள்மட்டும்தான் எழுத்தாளர்களா..?
எழுத்துவடிவம் பெறாத எத்தனையோ கதைகளை கர்ணபரம்பரைக் கதைகளாக செவிவழி உலாவவிட்டவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் இல்லையா?

எழுதாத ஒரு எழுத்தாளனாய் என்னுள்ளிருந்து எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன்-
என்தந்தை!

கதைகேட்கும் பருவத்திலிருந்து கதைவாசிக்கும் பருவம் வந்தது. பெட்டகத்துக்குள்ளிருந்து பெரிய எழுத்து மகாபாரதக்கதையை (அப்பாடி எவ்வளவு பாரம்?) எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கியாயிற்று.

மகாபாரதம் நடந்தபோது நானும் அங்கே இருந்தேன் என்று இப்போதும்என்னை நினைக்க வைக்கிறமாதிரி அந்த உலகத்திலேயே வாழ வைக்கிற எழுத்துக்கள்.


வாசகனாக மாறியது சரி..
எப்போது நான் எழுதத் தொடங்கினேன்...?
மீசைகூட அரும்பாத பருவத்தில் ஐந்தாம் வகுப்புப் படிக்கிற நேரத்தில் கதை என்று ஏதோ எழுதி என்பள்ளித் தோழன் சிவநாதனிடம் கொடுக்க--
எனக்கு அரிச்சுவடி சொல்லிக்கொடுத்த- சின்னத்துரை வாத்தியார் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் சிவநாதன் அதை வாசித்துக்கொண்டிருக்க -
மூக்குக் கண்ணாடியை உயர்த்தி அவனைப் பார்த்து கையிலிருந்த பிரம்பால் மேசையில் ஒரு தட்டுத்தட்டி -
"என்ன அது.. கொண்டு வா இங்கை!" என்று அதட்ட-
சிவநாதன் ஒரு பயமுமில்லாமல் அதை அவரிடம் கொண்டுபோய்க் கொடுத்து -
"மகேசன் எழுதின கதை!" என்றான்.
"கதையோ..?" என்றவர் சூட்டோடு சூடாக அதைப் புரட்டிப் படிக்க ஆரம்பித்தார்.

எனக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது.
(சின்னத்துரை வாத்தியாரிடம் ஒருநாளும் நான் அடிவாங்கினதில்லை. ஆனால் மற்றவர்கள் வாங்கும்போது அந்த அடியின் வலியை நானும் உணர்ந்திருக்கிறேன். இன்றைக்கு எனக்கும் சாத்தல்தான் என்பதுபோல் சிவநாதனைக் கிள்ளினேன். "ஏண்டா குடுத்தனி?"என்றேன். அவன் சிரித்தான். )

நான் எழுதினது என்னமோ ராசா ராணிக் கதைதான் என்றாலும் அதில் காதல் வேறு.

கதைச்சுருக்கம் இன்னும் நினைவில் நிற்கிறது.

இரண்டு நாடுகளுக்குப் பகை.
ஒரு ராசாவின் மகள் மற்ற ராசாவின் மகனைக் காதலிக்கிறாள்.
இருவரும் கந்தர்வமணம் புரிந்துகொள்கிறார்கள்.
இரண்டு ராசாக்களும் தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தங்கள் பகையை மறந்து ஒன்று சேர்கிறார்கள்.

மீசைமுளைக்காத பொடியன் காதல் கத்தரிக்காய் என்று கதை எழுதி அதை அ.. ஆவன்னா சொல்லிக்குடுத்த வாத்தியாரிடமே காட்டுவதென்றால்...
வாத்தியார் என்ன சொல்வாரோ...

ஒருவித பரபரப்புடன் இருந்தேன்.
"இங்கை வாடா..!"சிவநாதனை அழைத்தார் வாத்தியார்.
"இந்தா... இதை அவனிட்டைக்குடு!"
நான் அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவரது முகத்தில் ஒரு புன்சிரிப்பு தவழ்ந்தது.
"ம்.. நல்லாத்தான் எழுதிறை!"

அ..ஆ.. சொல்லித்தந்த அந்த வாத்தியார் எனக்களித்த ஆசீர்வாதம் அது.
நான் வானத்தில் பறப்பதுபோல் உணர்ந்தேன்.
மாதா பிதா குரு தெய்வம்!

-சின்னாச்சியின்ரமோன்.