Freitag, 25. Mai 2007

பேய்க்கதை கதைத்தவர்கள்


கனவுகள் கற்பனைகள் என்று மனத்தளவிலேயே படம் காட்டிக்கொண்டிருக்கிற வாழ்க்கை.
இப்படித்தான் வாழவேண்டும் எனச் சிலரும் எப்படியும் வாழலாம் என்பதாய்ப் பலரும் வாழ்நாட்களை விரட்டிக் கொண்டிருந்தாலும் எப்படியோதான் கழிந்துபோகிறது காலம்.
சுமைகள் எதுவும் சுமக்கவேண்டிய அவசியமில்லாத அல்லது அந்தச் சுமைகளை மூத்தவர்கள் சுமப்பார்கள் என்ற நிலையில் இளமைப்பருவம் இனிமையாகவே கழிந்துபோகிறது.
சின்னச் சின்ன ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் பள்ளிப்பருவத்தில் வரும்போதும் அவை உடனுக்குடன் தீா்க்கப்பட்டுவிடுவதால் கவலைகள் ஏதுமின்றி எதிர்காலம் என்ற இனிய கனவுக்குள் மனம் புகுந்துகொள்கிறது.

"நல்லாப் படிக்கவேணும்!"
"படிச்சிட்டு..?"
"நல்ல உத்தியோகம் பார்த்து நல்லா உழைக்க வேணும்!"
"அதுக்குப்பிறகு...?"
"அதுக்குப்பிறகு என்ன.. எல்லாரையும்போல கலியாணம் முடிச்சுக்கொண்டு பிள்ளை குட்டியளைப் பெத்துக்கொண்டு சந்தோஷமா இருக்க வேண்டியதுதான்.!"
வளர்ந்து விட்டால் சந்தோசங்கள் பறிபோய்விடும் என்கின்ற உண்மை புரியாத வயது அது.
அந்த வயதில் அப்படித்தான் கனவுகாண முடியும்.

வாழ்க்கை எப்போதும் நிரந்தரமானது என்ற மாயைத்திரையை விலக்காமல் வாழ்க்கை நாடகத்தின் காட்சிகளை மனத்துக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தவரை அது இனிமையாகத்தான் இருந்தது.
எல்லோர் வாழ்க்கையும் ஒருநாள் முற்றுப்பெறும் என்ற இயற்கையின் விதியை மிகச் சிறியவயதில் எனக்குக் காட்டியது என் அப்பாச்சியின் மரணம்.
அதற்கு முன்னும் சில மரணங்கள் நிகழ்ந்திருந்தன எனினும் அவைகள் எதுவும் எனக்கு நினைவில் இல்லை.
ஒப்பாரிகளும் ஓலங்களும் பறைமேளச் சத்தமும் பாடைகளும் என்று வேலிக்குப் பின்னால் நின்று பார்த்த பொழுதுகளில் அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் "ஆரோ செத்திட்டனமாம்!" என்பதுபோன்று அலட்சியப்படுத்துகிற வயதில் அந்த மரணங்கள் என்னிடத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியதாக இல்லை.

அப்பாச்சிக்குப் "பந்தம்"பிடித்துக்கொண்டு நின்றதுமட்டும் இன்னும் என்னுள் முதல் மரண நிகழ்வாய் பதிந்து கிடக்கிறது.
பெரியப்பு, சீனியப்பு, அப்பு, பெரியாத்தை, சீனியாத்தை, ஆச்சி, மாமிமார் அம்மான்மார் என்று அவவைச் சுற்றி நின்று அழுதவர்களின் கண்ணீர் எல்லாரும் ஒருநாளைக்கு சாகப் போயினம் என்ற உண்மையை எனக்கு அழுத்திச் சொல்லியிருக்கவேண்டும்.
பயம்?!
அன்றைக்குத்தான் அது என்னைத் தொட்டுக்கொண்டதாக நினைவு.
அப்பாச்சியின் காரியங்கள் எல்லாம் முடிந்து அடுத்துவந்த இரவுகளில் எனக்குத் திடீர் திடீர் என்று விழிப்பு வரும்.
என் "ஆச்சி"யின் (அம்மாவின்) பாயில் அவவுக்கு இரண்டு பக்கத்திலும் நானும் தங்கச்சியும் படுத்திருந்து ஆச்சியை இறுகக் கட்டிக்கொண்டு நிம்மதியாகத்தூங்கிய இரவுகள் மெள்ளத் தொலைந்து கொண்டிருந்தன.
"ஆச்சி...!"
நன்றாக நித்திரை கொள்ளும் ஆச்சியை மெதுவாகத் தட்டி எழுப்பினேன்.
"என்னடா?"
"நான் வெளியிலை போகப்போறன்!"
"..ம்..போ.. போய் இருந்திட்டு வா!"
வெளியே கும்மிருட்டு.
விழித்துப் பார்த்துக்கொண்டே சொன்னேன்.
"எனக்குப் பயமாக்கிடக்குது!"
"பயமோ.. என்னடா இது புதுப்பழக்கம்.. என்ன பயம்..முத்தத்திலை இறங்கிறதுக்கு!"
ஆனால் முற்றத்திலிருந்து ஒரு இருபதடி தாண்டி அப்பால் இருக்கும் தென்னைமரத்துக்குக் கீழே போகவேண்டும்.

"எனக்குத் தெரியா.. எனக்குப் பயமாக்கிடக்கு.. விளக்கை எடுத்தண்டு வா!"
"ம்..ஆம்பிளைப் பிள்ளை பயப்பிடுறான் பார்...!"
தூக்கக் கலக்கத்துடன் எழும்பும் ஆச்சி அரிக்கன் லாம்பின் சுடரைத் தூண்டி அதை எடுத்துக்கொண்டு என்னோடு முற்றத்தில் இறங்கினா.
"போ.. போய் இருந்திட்டு வா!"
அமாவாசை இருட்டுக்கு அரிக்கன்லாம்பு வெளிச்சம் எந்தமூலைக்கு?
எனது நிழலே பெரிதாய் பேயுருக்கொண்டு முற்றத்து வேலியில் கூத்தாடிற்று.

இருட்டுக்குள் கண்களைச் சுழற்றி எங்கிருந்தாவது ஏதாவது வருகிறதா என்று பார்த்துக்கொண்டு அவசர அவசரமாக "ஒண்டு"க்குப்போய்விட்டு
உடல்முழுதும் சட்டெனப்பரவி மறைந்த சிலிர்ப்புடன் களிசானைப் பூட்டிக்கொண்டு ஆச்சியை முந்தியபடி வீட்டுக்குள் ஓடினேன்.
"என்னடா..வடிவா இருந்திட்டியா..?"
"இருந்திட்டன்.. ஆனா..வயித்துக்கை என்னமோ செய்யுது..!"
இது வயிற்றுக் கோளாறினால் அல்ல என்பதும் பயத்தினால் என்பதும் ஆச்சிக்குப் புரிந்திருக்கும்.
"இரு.. இஞ்சித் தேத்தண்ணி சுடவைச்சுத் தாறன்!"
"வேணாம் ஆச்சி.. நீ படு!"
ஆச்சி தூங்கிய பின்னும் அடிக்கடி எனக்கு விழிப்பு வந்துகொண்டிருந்தது.
"பிறந்தவை எல்லாரும் செத்துப்போறதெண்டால் ஒருநாளைக்கு என்ரை ஆச்சியும் செத்துத்தானே போவா?"
- பயத்தை மீறிக்கொண்டு என் கண்களில் கண்ணீர் திரண்டது.
நானும் ஒருநாள் செத்துப்போவேன் என்ற நினைப்பு அப்போதில்லை.
ஆச்சி சாகப்படாது.
புரியாத பருவத்தில் வாழ்வின் நிலையாமையை நான் உணர்ந்துகொண்டதாக நான் புரிந்துகொண்ட ஒருபொழுதில் என்னுள் ஒருவித பயம் வந்து ஒட்டிக்கொண்டது எதனால் என்று அப்போது எனக்கு விளங்கவில்லை.
இருப்பவர்கள் எல்லோரும் ஒருநாள் இல்லாமல் போகப் போகிறார்கள் என்ற
உண்மை புரிந்ததனால் விளைந்த பயமா அது?
இறந்தவர்கள் எஙகு போகிறார்கள்?
இத்தனை காலம் இருந்தவர்கள் இப்போது இல்லையெனில் எங்கே அவர்கள்?
நிச்சயமாக அவர்கள் இந்த உலகத்தைவிட்டு வேறு எங்கும் போயிருக்க மாட்டார்கள்.
அப்படியானால் சிலபேர் சொல்கிறதுமாதிரி ஆவிகளாக பேய்களாக உலவிக்கொண்டிருப்பார்களா?
சரி அப்படி உலவிக்கொண்டிருப்பவர்கள் ஏன் இரவுகளில்மட்டும் வர வேண்டும்.
பகல்பொழுதின் இரைச்சல்கள் அவர்களுக்கு எரிச்சலூட்டுமோ என்னவோ!மனிதர்கள் இயக்கமில்லாமல் உறங்கும் பொழுதுகளில்தான் அவர்கள் தம்பாட்டுக்கு உலவித்திரிய முடியுமோ என்னவோ.. அல்லது தத்தம் ஆவிகளை வெளியே உலவவிட்டு மரக்கட்டைகளைப் போல உறங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களின் ஆவிகளோடு இறந்தவர்களின் ஆவிகள் பேசுவதற்கு இரவுதான் ஏற்ற நேரமோ என்னவோ?
வாழ்க்கை மர்மம் நிறைந்ததுதான்.
மரணம் என்னும் இந்த மர்மத்துக்கு விடைகிடைக்கும்வரை மனிதனின் அச்சமும் அவனிடமிருந்து விடைபெறப்போவதில்லை.
ஒன்றைப் பற்றித்தெரியாமல் அதைப்பற்றிப் பயப்படுவதில் அர்த்தமில்லை. பேய்களைப்பற்றி ஆவிகளைப்பற்றி ஆராவது சொல்ல மாட்டார்களா?
இப்போது என் கவனம் மா்மக்கதைகளின் பக்கம் திரும்பிவிடுகிறது.
கல்கி குமுதம் ஆனந்தவிகடன் கலைமகள் கண்ணன் கல்கண்டு அம்புலிமாமா இவற்றோடு, வண்ணத்தில் கொலை கொள்ளைக்காரர்களையும் துப்பாக்கியையும் அதற்கு முன்னால் அலறும் பெண்களின் முகத்தையும் வரைந்து வா வா என்றழைக்கும் பேய்க்கதைகள் மலிவுவிலை மர்ம நாவல்களாகப் புத்தகக் கடையில் தொங்கிக்கொண்டிருந்தன.
அவைகளை வாசிக்கும் வயது எனக்கு இல்லை என்பதால் அவற்றை வாங்கி பாடப் புத்தகங்களுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தனியாகப் போயிருந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
இரவு நேரங்களில் பேய்க்கதை மன்னன் பிடி.சாமி பேய்களையும் கூட்டிக்கொண்டு எங்கள் வளவுத் தென்னைமரங்களுக்குக் கீழே வந்தமர்ந்தார்.
ஏற்கனவே சரியான பயங்கொள்ளி என்பதால் அவரால் என்னை நன்றாகவே மிரட்ட முடிந்திருந்தது.
அது என்னமோ அந்தப் பொழுதுகளில் பயந்து பயந்து வாசிப்பதில் அல்லது வாசித்து வாசித்துப் பயப்படுவதில் உள்ளார ஒரு மகிழ்ச்சி இருந்தது.
ஏராளமான எழுத்தாளர்கள் அப்போது பேய்க்காட்டப் புறப்பட்டிருந்தாலும் பி.டி.சாமி என் மனதில் இடம்பிடித்துக்கொண்டார்.
அவருக்கென்று ஒரு தனிநடை.
தமிழால் பேய்க்காட்டுவதற்கும் ஒரு தனித்திறமைவேண்டும்.
அது அவரிடம் அதிகமாகவே இருந்தது அதனால்தான் அவர் அதிகமாக எழுதிக்குவித்தார்.
என்னைப் போன்ற அப்போதைய பேய்ப்பெடியங்கள் நிறையப்பேரை தன் பே எழுத்துக்களால் பேப்பிடி பிடிச்சுக்கொண்ட ஒரு பேய்க்காய் பி.டி.சாமிதான்.
- சின்னாச்சியின்ரமோன்.

Mittwoch, 16. Mai 2007

பக்கத்து வீட்டுக் கண்ணகி



"ஐம்பெருங் காப்பியங்கள் எவை...? நீ ..சொல்லு!"


தமிழ்வாத்தியார் என்னைப் பார்க்கிறார்.


மெதுவாக எழுந்து நிற்கிறேன்.
"சிலப்பதிகாரம்.."


சட்டென அதுமட்டும் ஞாபகம் வர சொல்லிவிட்டு தயங்குகிறேன்...




"ம்..இன்னும்..!"


"மணிமேகலை..!"


மீண்டும் தயக்கம்


"ம்..!"


வாத்தியார் என் முகத்தைப் பார்க்கிறார்.


"வளையாபதி... குண்டலகேசி...சீவகசிந்தாமணி...!"


"ம்...இரு!"
சரியான விடைசொல்லிவிட்ட சந்தோசத்தோடு உட்கார்கிறேன்.


ஏற்கனவே வாத்தியார் சொல்லித்தந்ததை மனப்பாடமாக்கி ஒப்புவித்தாயிற்று.


ஆனால் இந்த ஐம்பெருங்காப்பியங்களில் எதையும் அப்போது படித்திருக்கவில்லை.


என்றாலும் சிலப்பதிகாரம்மட்டும் எனக்கு ஏற்கனவே தெரிந்த - மிகவும் அறிமுகமான - கதைபோல உணர்ந்திருந்தேன்.


சிலப்பதிகாரம் எங்கள் ஊருக்குள்ளே நிகழ்ந்த கதைபோலவும் எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த கண்ணகியம்மன் கோவில்தான் கண்ணகி முன்பு குடியிருந்த வீடுபோலவும் இப்போதும் அவள் இங்கேதான் குடியிருக்கிறாள் என்பதுபோலவும் எனக்குள் ஒரு நிழற்படம் நிலையாகியிருந்தது.







பலவருடங்களுக்கு முன்பு (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்) ஒருநாள் எங்கள் ஊரின் கிழக்குக் கடற்கரையோரத்திலிருக்கும் ஒரு கலங்கரைவிளக்கின் அருகே பெரியதொரு மரப்பேழைகிடப்பதைச் சிலர் கண்டனராம்.


அதனை ஊருக்குள் சுமந்து வந்தவர்கள் சற்று இளைப்பாறுவதற்காக தற்போது கோயில் அமைந்திருக்கும் இடத்திலுள்ள ஒரு பூவரச மரத்தினடியில் அதை இறக்கிவைத்தனராம்.


மறுபடி தூக்க முயன்றபோது அந்தப் பேழை அசைய மறுத்துவிட்டதாம். அப்போது அங்கு நின்ற பெண்களிலொருத்தி உருக்கொண்டு இந்தப் பேழைக்குள் இருப்பது கண்ணகியாகிய தான்தான் என்றும் தனக்கொரு கோயிலை இந்த இடத்திலேயே அமைக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறாள் அவளது சொற்படியே அந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது.


மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட கண்ணகி தன் கோபம் தீர்ந்ததும் இங்கு வந்துவிட்டதாக ஊரவர் நம்பினர்.


"அப்பு" இந்தக் கதையை யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தபோது அதை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.


நடந்திருக்குமோ நடந்திருக்காதோ என்று ஆராய்ச்சிசெய்கிற வயதல்ல எனக்கு.


"கண்ணகி எண்டால் ஆர்?"


"அது மதுரையிலை வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்!"


"மதுரை எண்டால்...?"


"அது தென்னிந்தியாவிலை இருக்கிற ஒரு ஊர்!"


"அது சரியான தூரம் எல்லே..?"


அப்பு சிரித்தார்.


"ஆனா எங்களுக்குக் கிட்ட...! இந்தக் கடலைத் தாண்டி அந்தப் பக்கம்போனால் இந்தியாதான்!"


"எவ்வளவு தூரம்...?"


"என்ன ஒரு பதினேழு பதினெட்டுக் கட்டை வரும்!"


(கட்டை என்றால் ஒரு மைல்)


இவ்வளவு கிட்டத்தில் இருந்தால் கண்ணகி வரலாம்தான் என்று நினைத்துக்கொண்டேன்.




கண்ணகியின் கதைதான் சிலப்பதிகாரம். இளங்கோ அடிகள் எழுதினது என்று தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் படிக்கவில்லை.


எனது மிகச் சிறிய வயதில் கண்ணகியம்மன் ஆலய முன்றலில் தொடர்ந்து மூன்றுநாட்கள் சிலப்பதிகாரவிழா நடைபெற்றிருக்கிறது.




ம.பொ.சி., குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜகந்நாதன் போன்ற இந்திய தமிழறிஞர்களும், ஈழத்து அறிஞர்களும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்திருக்கிறார்கள் என்று அறிந்திருந்தேன்.


(இந்தவிழாவைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் யாராவது இருந்தால் விபரம் தாருங்கள்)







இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை எங்கள் தலைமுறை நன்கு தெரிந்துகொள்வதற்கு அதிகமாய்ப் பாடுபட்டவர் "சிலம்புச் செல்வர்" ம.பொ.சி.யே என்று அறிந்ததால் அவர்மீது எனக்குள் ஒருவித பாசம் துளிர்த்தது.




ம.பொ.சி.யாக இளங்கோ அடிகள் நடமாடிக்கொண்டிருப்பதுபோல ஒரு கற்பனையை எனக்குள் வளர்த்துக்கொண்டிருந்தேன்.




ம.பொ.சி. இல்லையேல் சிலப்பதிகாரமோ கட்டபொம்மனோ கப்பலோட்டிய தமிழனோ இந்த அளவுக்கு வெளிப்பட்டிருக்க மாட்டார்கள் என்று பலரும் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.




கட்டபொம்மன்பற்றி ம.பொ.சியின் கூற்றுக்கு எதிராக எனது அபிமான எழுத்தாளர் தமிழ்வாணன் கல்கண்டில் "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்று தொடர்கட்டுரை எழுதியபோது தமிழ்வாணனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று எனக்குக் கோபம் கோபமாக வந்தது.






-சின்னாச்சியின்ரமோன்

Sonntag, 13. Mai 2007

கற்பனைகளும் புராணங்களும்










உலகத்தில் பிறந்த எல்லோருமே கதாசிரியர்கள்தான்.
சிலர் எழுதுகிறார்கள் - பலர் எழுதுவதில்லை.
சிலர் சொல்கிறார்கள் - பலர் சொல்வதில்லை.
அவ்வளவுதான் வித்தியாசம்.
மற்றும்படி எல்லோருமே கதாசிரியா்கள்தான்.
ஆனால் எழுதுபவர்மட்டுமே எழுத்தாளர் என்று பேர் வாங்கிக்கொண்டு போய் விடுகிறார்கள்.

உள்ளமும் உணர்வும் அதன்வழிவருகின்ற அனுபவங்களும் கதைகளாக மாறிவிடுகின்றன.
"நேற்றிரவு என்னால் தூங்கமுடியவில்லை!" என்பதில் ஒரு கதை..
"இன்றைக்குத்தான் அவன் என்னுடன் பேசினான்!" என்பதில் ஒரு கதை..
"இனி அவளை நான் சந்திக்கமாட்டேன்" என்பதில் ஒரு கதை..
"அந்தக் குழந்தை அழுதுகொண்டிருந்தது!" என்பதில் ஒரு கதை...
இப்படி ஒவ்வொருவரும் கதைக்கின்ற வாக்கியங்களுக்குப் பின்னாலும் ஒளிந்துகொண்டிருக்கிற உணா்வு அல்லது அனுபவம்- தன்னுள் ஏதேனும் ஒரு கதையைத் தாங்கிக்கொண்டிருக்கிறது.
தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை ஒருவர் சொல்லும்போது அதைச் சிலரால் அங்கீகரிக்க முடிவதில்லை.
"சுத்தப் புளுகு!" என்றோ "இவன் கற்பனைசெய்து கதைக்கிறான்!" என்றோ அந்தக் கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள்.
மற்றவர் சொல்வதை மறுதலிப்பதனால் தம்மைப் புத்திசாலிகளாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்கின்ற விருப்பத்தின் வெளிப்பாடு அத்தகைய கதைகளை ஒதுக்கிவிடத் தூண்டுகிறது.

சிறுவர்களான எங்கள் உலகம் மகிழ்ச்சிகரமானது.
எதற்காகவேனும் அடம்பிடித்து அழுதாலும் அடுத்தகணமே அந்தத் துன்பத்தின் சாயல் துளியுமின்றி சிரித்து மகிழ்ந்து துள்ளாட்டம் போடுவது. வளர்ந்துகொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலே குழந்தைத் தனமான சந்தோசங்களில் மனதைப் பறிகொடுத்திருப்பது.
அந்தப் பொழுதுகளில்-
"அப்பு"வைப்போல் எனக்குத் தொடர்ச்சியாகக் கதைசொல்ல எவராவது வரவேண்டியிருந்தது.
புத்தகங்களின் வடிவில் வந்த எழுத்தாளர்கள் புதியதொரு உலகத்தை எனக்குள் உருவாக்கியிருந்தார்கள்.
நாம் வாழும் இந்த உலகத்தினுள் இன்னொரு உலகத்தை அவர்களால் உருவாக்க முடிந்திருந்தது. இது நடக்காது என்று தெரிந்தும் நடந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வைத் தரும் கதைகள் அவை.
அந்தப் பருவத்துக்குரிய இத்தகைய கதைகளைத் தந்தவர்கள் பலர் இருந்தாலும் அன்றைய கால கட்டத்தில் என் மனதுக்குள் இடம்பிடித்துக்கொண்டிருந்தவர்-
வாண்டுமாமா.
அவரது கதைகள் பல தொடர்கதைகளாகவும், சித்திரக்கதைகளாகவும் வெளிவந்திருக்கின்றன. அந்தக் கதைகளுக்குள் உலவிய கதாபாத்திரங்கள் பலர், இரவும்பகலும் என்னுள்ளும் உலவிக்கொண்டிருந்தார்கள். மண்ணிலும் விண்ணிலும் நீரிலும் என்று புதிய புதிய கனவுலகங்களை அவர் தன் எழுத்தில் எடுத்துவந்தார்.அந்த வண்ணக் கனவுகளில் மனதைப் பறிகொடுத்த காலங்கள் இன்னும் பசுமையாக...

வளரவளர வாழ்க்கையில் இன்னும் அதிசயமான நிகழ்வுகளைச் சந்திக்கப் போகிறோம் என்ற பிரமையை அவை தந்தன. அவற்றை வாசிப்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி இருந்தது.
வாண்டுமாமாவின் கதைகளைப் போலவே அந்தப் பருவத்தில் நான் வாசித்த புராணக்கதைகளும் ஒருவகை மாயாஜாலக்கதைகள் போலவே அப்போது எனக்குத் தோன்றின.
"ஒரு தேவாரம் படி..!"
"தேவாரமா?"
"என்னடா தேவாரம் தெரியாதா?"
"...........!"
"தோடுடைய செவியன்...!"
"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தே ஏத்த அருள்செய்த
பீடுடைய பிரமா புரமேவிய பெம்மான் இவன் அன்றே!"
-பாடினேன்.
ஞானப் பால் உண்ட ஞானசம்பந்தன் பாடிய தேவாரம்.
தீர்த்தக் குளத்தருகே நின்று மூன்றே வயதான ஞானசம்பந்தன் பாடிக் கொண்டிருந்தான்.

தீர்த்தக்குளம் என்றதும் எனக்கு முதலில் நினைவில் வருவது கண்ணகி அம்மன் கோவில் தீா்த்தக் குளம்தான்.
அப்போது கண்ணை மூடிக்கொண்டு அந்தத் தேவாரத்தை நான் ஒப்புவித்தபோது -என் கண்களுக்குள் எங்கள் ஊர்த் தீர்த்தக்குளத்தருகே நின்று ஞானசம்பந்தன் பாடிக்கொண்டிருப்பதாகத்தான் காட்சி விரிந்தது.
கண்ணகியாள் ஆலயத்தின் தெற்கு வீதியில் -அலையெறியும் கடலின் கரையில் அமைந்திருக்கும் அந்தக் குளத்தின் படிக்கட்டுகளில் நின்று பார்த்தால் மேற்குத் திசையில் செக்கச் சிவந்த சூரியன் கடலுள் விழும் காட்சி விரியும்.
சற்றுத் தொலைவில் கடலின் கரையருகே சுடுகாடு.
அதற்கும் சற்றுத் தூரத்தில் வைத்தியசாலை.

"செக்கச் சிவந்த சிவன் சுடலைப்பொடி பூசி என் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறான்..!"
-என் கற்பனையில் அப்போது விரிந்த காட்சிதான் அது.
என்றாலும் அது வெறும் கற்பனைதானா?

வாண்டுமாமாவின் கற்பனைக் கதைகளை வாசித்துக்கொண்டிருந்த அந்தப் பொழுதுகளில்தான் புராணக் கதைகளையும் நான் வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.
- சின்னாச்சியின்ரமோன்.



Dienstag, 1. Mai 2007

ஞானப் பழத்தைப் பிழிந்து...




















எங்கள் வீட்டுக்குப் புதிதாக ஒரு வானொலிப்பெட்டி வந்திருந்தது.
பெரியண்ணா கொழும்பிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தபோது கொண்டு வந்திருந்தார்.
ஏற்கனவே வீட்டில் பாடிக்கொண்டிருந்த "கிராமபோன்" பெட்டியில் சாதாரணத் தோசை அளவிலான இசைத்தட்டுக்களைப் போட்டு "தீன கருணாகரனே நடராஜா!" என்று தியாகராஜபாகவதரும்
"குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது.." என்று சி.எஸ்.ஜெயராமனும்
"ஞானப் பழத்தைப் பிழிந்து..!" என்று கே.பி.சுந்தராம்பாளும்
"மலரின் மதுவெல்லாம் இன்னிசைதானோ..?" என்று ஏ.எம். ராஜாவும் அடிக்கடி பாடிக்கொண்டிருந்ததை நிறுத்தி
"இலங்கை வானொலி தேசிய ஒலிபரப்பு!" என்றும்
"இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு!" என்றும் கேட்கத் தொடங்கியாயிற்று.
ஐந்தாம் வகுப்போடு இராஜராஜேஸ்வரி வித்தியாசாலையிலிருந்து பிரிந்து வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்த மகாவித்தியாலயத்தில் போய்ச் சேர்ந்திருந்தேன்.
வீட்டுக்கும் பாடசாலைக்கும் பதினைந்து நிமிட நடைத்தூரம்.
இராஜேஸ்வரியில் மத்தியானத்துடன் பள்ளிக்கூடம் முடிந்து விடும்.
மகாவித்தியாலயத்தில் இரண்டு வேளை வகுப்பு.
மத்தியானம் சாப்பாட்டு வேளைக்கு முக்கால் மணித்தியாலம்.
அந்த இடைவேளைக்குள் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக வந்து "ஆச்சி"(அப்பாவை "அப்பு" என்று அழைப்பதுபோல் அப்போதெல்லாம் அம்மாவை ஆச்சி என்றுதான் அழைப்பது) ஆக்கிவைத்திருக்கும் சோற்றை அவசர அவசரமாக உருட்டி வாயில் போட்டுவிட்டு திரும்பவும் பாடசாலைக்கு ஓட்டமும் நடையுமாகப் போய்ச்சேர்வது.
பின்னேரம் பாடசாலை விட்ட பிறகு ஆறுதலாக நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு வருவது..
இப்போது வானொலிப்பெட்டி வந்தபிறகு விரைவாகவே வீட்டுக்கு வந்துவிடுவேன்.
காலையில் ஓரிரண்டு மணித்தியாலங்களும் பின்னேரங்களில் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலமும்தான் வானொலியில் பாட்டுக்கள் ஒலிபரப்பாகும்.
தேசிய ஒலிபரப்பு, வர்த்தக ஒலிபரப்பு என்று இரண்டு சேவைகள்.
வர்த்தக ஒலிபரப்பே அதிகமான நேயர்களைக் கவர்ந்திருந்தது.
தேசிய ஒலிபரப்பு பின்னேரங்களில் 5 அல்லது 6மணிக்கு ஆரம்பமாகி இரவு 10 அல்லது 11மணிவரை ஒலிபரப்பானதாக ஞாபகம்.
தேசிய ஒலிபரப்பு பலவிதமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தாலும் வர்த்தக ஒலிபரப்பு திரைப்படப் பாடல்களை அடித்தளமாகக் கொண்டு இயங்கியதால் அதிகமான நேயர்களைக் கவர்ந்திருந்தது.
வர்த்தக ஒலிபரப்பின் பிரபலத்துக்கு அப்போது முக்கிய காரணமாக விளங்கியவர் அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனன்.
ஒருமுறை தமிழ்நாட்டில் ஒரு விழா நடந்ததாம்.அந்த விழாமேடையில் விழா அறிவிப்பாளர் இரசிகர்களைப் பார்த்து இப்போது உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒருவர் உரையாற்றுவார் என்று அறிமுகப்படுத்திவிட்டு ஒருவரை அழைத்தாராம்.
மேடையில் வந்து நின்றவரை எவருக்கும் தெரியவில்லை.
யாரிவர் என்று எல்லோரும் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்க அவர் தனது கம்பீரமான குரலில்"வணக்கம் நேயர்களே! இது இலங்கைவானொலி வர்த்தக ஒலிபரப்பு இப்போது நேரம் மாலை 6.00மணி.." என்று ஆரம்பிக்க இரசிகர்களின் கரகோசம் வானைப் பிளந்ததாம்.
இலங்கைவானொலி வர்த்தக ஒலிபரப்பு தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்புப் பெற்றிருந்ததற்கு இது ஒரு உதாரணம்.
திரைப்படப் பாடல்கள் பலரால் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளானபோதும் அது சமூகத்திலும் தனிமனிதரிடத்திலும் ஏற்படுத்திவரும் தாக்கம் அதிகம்தான்.
எனக்குப் பிடித்த பாட்டு என்று ஏதாவதொன்றை உங்களால் நினைத்துப் பார்க்க முடிந்தால் அந்தப் பாடலின் பின்னணியில் ஒரு கதை இருக்கும்.
கதைக்குள் பாட்டு அல்லது பாட்டுக்குள் கதை என்று கற்பனை செய்தால் ஒரு இசையும் கதையும் உருவாகிவிடும்.

பெரும்பாலும் கனவுகளிலே மூழ்கிப்போய்விடுகிற எனது சின்னவயசில்நான் அதிகம் வெட்கப்படுகிறவனாகவும் ( "எப்பவும் தாயின்ரை சீலைக்குள்ளைதான் தலை" என்று எனது அம்மாச்சி என்னைப் பேசுவா) இருளுக்கு அஞ்சுகிறவனாகவும், உறவுக்காரர்களைத் தவிர ஏனைய மனிதர்களுடன் பழகுவதற்குப் பிடிக்காதவனாகவும், எப்போதும் தனிமையைத் தேடுகிறவனாகவும் இருந்திருக்கிறேன். (கண்ட கண்ட பெடியங்களோடை சேர்ந்து திரியப்படாது என்று  அப்பா என்னை எச்சரித்து வைத்திருந்ததும் ஒரு காரணம்)
பாடசாலை முடிந்துவந்ததும் பெடியங்கள் கண்ணகி அம்மன் கோவில் மேற்கு வீதியில் கிட்டி, தாச்சி என்று விளையாடிக்கொண்டிருக்கும் மாலை நேரங்களில் நான் வீட்டுக்குள் ஏதாவது புத்தகங்களோடு உறவாடிக் கொண்டிருப்பேன். அப்பாவின் கண்டிப்பு என்னை ஒரு புத்தகப் பூச்சியாக மாற்றுவதற்கு உதவியிருந்தது.
வெறும் கற்பனைக் கதைகளில் மனதைப் பறிகொடுத்திருந்த எனக்கு வாழ்வின் வேறொரு பக்கம் இருப்பதாகக் கற்பித்தவர் தமிழ்வாணன்.
"துணிவே துணை!" என்று பெரிய எழுத்திலும், கல்கண்டு என்பதை சிறிய எழுத்திலுமாகப் போட்டு கல்கண்டை வெளியிட்டு தமிழ்ச் சிறுவர்களின் மனங்களைப் பற்றிக்கொண்ட தமிழ்வாணன், "கல்கண்டு" என்ற இனிப்பான பெயரைச் சூட்டி எதையும் "கண்டு -கல்!" ("காண்பவைகளால் அறிவு பெறு!") என்று உணர்த்தி என்போன்ற சிறுவர்களுக்கு "எழுத்தாள வாத்தியாராக" தன்னை இனம்காட்டினார்.
மத்தியானம் சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டுக்கு வரமாட்டேன் என்று ஆச்சியிடம் சொல்லிவிட்டு பாண்வாங்கிச் சாப்பிடுகிறேன் என்று சில்லறை வாங்கிக்கொண்டு அந்தக் காசில் மகாவித்தியாலயத்துக்கு முன்னிருக்கும் புத்தகக் கடையில் கல்கண்டு வாங்கி வாசித்த நாட்களும் என் பாடசாலைப் பருவத்தில் அதிகம்தான்.
அதிகமான புத்தகங்கள் தினசரிகள் என்று கொழும்பிலிருந்து வந்தாலும் சிறுவர்களுக்கான கல்கண்டு, கண்ணன் போன்ற புத்தகங்களை ஊருக்குள்ளிருந்த புத்தகக் கடையில் நான் வாங்கினேன்.
என்னுள்ளிருந்த சின்னப்பெடியன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அவனுக்கு மீசை அரும்பிய பொழுதில் அவனிடமிருந்த வெட்கத்தையும், பயத்தையும் பிடுங்கி எறிவதற்கென்று எழுத்தாணி கொண்டு வந்தார் இன்னொரு எழுத்தாளர்.
தமிழ்வாணன்போல் தன்னம்பிக்கைக் கட்டுரைகளை நூலாக்கித்தந்த அந்த எழுத்தாளர்-
தமிழ்நாட்டு எழுத்தாளரான - அப்துற் றகீம்
தங்கள் எழுத்துக்களால் எனக்கு வாழ்க்கைப் பாடம் போதித்தவர்கள் என்று சொல்வதானால் இவர்கள் இருவரையும்தான் முதலில் நினைத்துக் கொள்வேன் எப்போதும்!
-சின்னாச்சியின்ரமோன்