Mittwoch, 16. Mai 2007

பக்கத்து வீட்டுக் கண்ணகி



"ஐம்பெருங் காப்பியங்கள் எவை...? நீ ..சொல்லு!"


தமிழ்வாத்தியார் என்னைப் பார்க்கிறார்.


மெதுவாக எழுந்து நிற்கிறேன்.
"சிலப்பதிகாரம்.."


சட்டென அதுமட்டும் ஞாபகம் வர சொல்லிவிட்டு தயங்குகிறேன்...




"ம்..இன்னும்..!"


"மணிமேகலை..!"


மீண்டும் தயக்கம்


"ம்..!"


வாத்தியார் என் முகத்தைப் பார்க்கிறார்.


"வளையாபதி... குண்டலகேசி...சீவகசிந்தாமணி...!"


"ம்...இரு!"
சரியான விடைசொல்லிவிட்ட சந்தோசத்தோடு உட்கார்கிறேன்.


ஏற்கனவே வாத்தியார் சொல்லித்தந்ததை மனப்பாடமாக்கி ஒப்புவித்தாயிற்று.


ஆனால் இந்த ஐம்பெருங்காப்பியங்களில் எதையும் அப்போது படித்திருக்கவில்லை.


என்றாலும் சிலப்பதிகாரம்மட்டும் எனக்கு ஏற்கனவே தெரிந்த - மிகவும் அறிமுகமான - கதைபோல உணர்ந்திருந்தேன்.


சிலப்பதிகாரம் எங்கள் ஊருக்குள்ளே நிகழ்ந்த கதைபோலவும் எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த கண்ணகியம்மன் கோவில்தான் கண்ணகி முன்பு குடியிருந்த வீடுபோலவும் இப்போதும் அவள் இங்கேதான் குடியிருக்கிறாள் என்பதுபோலவும் எனக்குள் ஒரு நிழற்படம் நிலையாகியிருந்தது.







பலவருடங்களுக்கு முன்பு (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்) ஒருநாள் எங்கள் ஊரின் கிழக்குக் கடற்கரையோரத்திலிருக்கும் ஒரு கலங்கரைவிளக்கின் அருகே பெரியதொரு மரப்பேழைகிடப்பதைச் சிலர் கண்டனராம்.


அதனை ஊருக்குள் சுமந்து வந்தவர்கள் சற்று இளைப்பாறுவதற்காக தற்போது கோயில் அமைந்திருக்கும் இடத்திலுள்ள ஒரு பூவரச மரத்தினடியில் அதை இறக்கிவைத்தனராம்.


மறுபடி தூக்க முயன்றபோது அந்தப் பேழை அசைய மறுத்துவிட்டதாம். அப்போது அங்கு நின்ற பெண்களிலொருத்தி உருக்கொண்டு இந்தப் பேழைக்குள் இருப்பது கண்ணகியாகிய தான்தான் என்றும் தனக்கொரு கோயிலை இந்த இடத்திலேயே அமைக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறாள் அவளது சொற்படியே அந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது.


மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட கண்ணகி தன் கோபம் தீர்ந்ததும் இங்கு வந்துவிட்டதாக ஊரவர் நம்பினர்.


"அப்பு" இந்தக் கதையை யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தபோது அதை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.


நடந்திருக்குமோ நடந்திருக்காதோ என்று ஆராய்ச்சிசெய்கிற வயதல்ல எனக்கு.


"கண்ணகி எண்டால் ஆர்?"


"அது மதுரையிலை வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்!"


"மதுரை எண்டால்...?"


"அது தென்னிந்தியாவிலை இருக்கிற ஒரு ஊர்!"


"அது சரியான தூரம் எல்லே..?"


அப்பு சிரித்தார்.


"ஆனா எங்களுக்குக் கிட்ட...! இந்தக் கடலைத் தாண்டி அந்தப் பக்கம்போனால் இந்தியாதான்!"


"எவ்வளவு தூரம்...?"


"என்ன ஒரு பதினேழு பதினெட்டுக் கட்டை வரும்!"


(கட்டை என்றால் ஒரு மைல்)


இவ்வளவு கிட்டத்தில் இருந்தால் கண்ணகி வரலாம்தான் என்று நினைத்துக்கொண்டேன்.




கண்ணகியின் கதைதான் சிலப்பதிகாரம். இளங்கோ அடிகள் எழுதினது என்று தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் படிக்கவில்லை.


எனது மிகச் சிறிய வயதில் கண்ணகியம்மன் ஆலய முன்றலில் தொடர்ந்து மூன்றுநாட்கள் சிலப்பதிகாரவிழா நடைபெற்றிருக்கிறது.




ம.பொ.சி., குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜகந்நாதன் போன்ற இந்திய தமிழறிஞர்களும், ஈழத்து அறிஞர்களும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்திருக்கிறார்கள் என்று அறிந்திருந்தேன்.


(இந்தவிழாவைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் யாராவது இருந்தால் விபரம் தாருங்கள்)







இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை எங்கள் தலைமுறை நன்கு தெரிந்துகொள்வதற்கு அதிகமாய்ப் பாடுபட்டவர் "சிலம்புச் செல்வர்" ம.பொ.சி.யே என்று அறிந்ததால் அவர்மீது எனக்குள் ஒருவித பாசம் துளிர்த்தது.




ம.பொ.சி.யாக இளங்கோ அடிகள் நடமாடிக்கொண்டிருப்பதுபோல ஒரு கற்பனையை எனக்குள் வளர்த்துக்கொண்டிருந்தேன்.




ம.பொ.சி. இல்லையேல் சிலப்பதிகாரமோ கட்டபொம்மனோ கப்பலோட்டிய தமிழனோ இந்த அளவுக்கு வெளிப்பட்டிருக்க மாட்டார்கள் என்று பலரும் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.




கட்டபொம்மன்பற்றி ம.பொ.சியின் கூற்றுக்கு எதிராக எனது அபிமான எழுத்தாளர் தமிழ்வாணன் கல்கண்டில் "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்று தொடர்கட்டுரை எழுதியபோது தமிழ்வாணனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று எனக்குக் கோபம் கோபமாக வந்தது.






-சின்னாச்சியின்ரமோன்

Keine Kommentare: