Samstag, 23. Juni 2007

அரும்பு மீசை




வாழ்க்கை என்பது ஒன்று போலத் தோன்றினாலும் உண்மையில் அது இரண்டு.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஒருமுறைதான் வாழ்கிறோம் என்பதில் உண்மையில்லை.
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாய் நிச்சயிக்கப்பட்டுவிட்ட வாழ்க்கை.
அகத்திலும் புறத்திலுமாய் ஒரு சமயத்தில் இருவேறுபட்ட வாழ்வை ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
உயிர்கொண்ட உடல் வாழும் வாழ்க்கை என்பது ஒன்று.
இந்த உடலுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் மனம் வாழும் வாழ்க்கை என்பது மற்றொன்று.
ஒவ்வொருவரும் நினைத்தபடி வாழ முடிவதில்லை என்பது ஒரு வாழ்க்கை. நினைவுகளிலேயே வாழ்ந்துகொண்டிருப்பது ஒரு வாழ்க்கை.
எதைப்பற்றியும் கவலைகொள்ளாத வயதுகளைக்கடந்து ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கிற பருவத்துக்கு வந்தாயிற்று.
மேலுதட்டின்மீது மெள்ள அரும்பும் மீசை.
யாரும் அறியாமல் வலது கைப் பெருவிரலும் ஆள்காட்டி விரலும் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் மேலுதட்டை மெள்ள வருடுகையில் அரும்பு மீசையின் மென்மையில் ஆண்மையின் வன்மை துளிர்ப்பது தெரிகிறது.
உனக்குள் இன்னொருவன் உருவாகிவிட்டான் என்று உணர்த்துகிறது காலம்.
"நான் இப்ப சின்னப் பெடியன் இல்லை... நானும் வளர்ந்திட்டன்!" என்று நினைக்கும்போது எனக்குள்ளே இன்னொருவனைக் காண்கிற வியப்புடன் கூடவே ஒருவித பெருமிதமும் மனதில் வந்து ஒட்டிக்கொள்கிறது.
மேலுதட்டில் மீசையும் கீழுதட்டில் பீடியுமாய் என் வயதொத்த பெடியன்கள்.

அப்போதைய சூழ்நிலையில் நான் படித்த கதைகள், கேட்ட பாடல்கள் பலவும் காதல் தோல்வியைச் சொல்லி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தன.
"காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் கலங்குகிறான் அவளை நெஞ்சில் இருத்தி!" என்று ஏ.எம்.ராஜா வானொலிப்பெட்டிக்குள் அடிக்கடி அழுது கொண்டிருந்தார்.
"ஏட்டில் எழுதிவைத்தேன் எழுதியதைச் சொல்லிவைத்தேன்.. கேட்டவளைக் காணோமடா இறைவா கூட்டிச் சென்ற இடமேதடா" என்று மறுபக்கத்தில் கண்ணதாசன், செளந்தரராஜனின் குரலில் தவித்துக் கொண்டிருந்தார்.
கனவுக் காதலியோடு சோகம்கலந்த சுகமான ஒரு தனிமையில் உறவாடும் அரும்புமீசைப் பருவத்தில் என் கையில் கிடைத்த ஒரு நவீனம்-
அகிலனின் "பாவை விளக்கு!"
தொடர்கதையாக வந்த பெரும்பாலான கதைகளை வார இதழ்களிலிருந்து தனித்தனி அத்தியாயங்களாகச் சேகரித்து முழுமையான நவீனங்களாக உருவாக்கி புத்தகங்களாகச் சேகரிக்கும் பழக்கம் என் சின்னண்ணாவிடம் இருந்தது. ஒவ்வொரு தடவையும் அவர் ஊருக்கு வரும்போதும் சில புத்தகங்களுடன்தான் வருவார்.
எல்லாம் அழகாகக் கட்டப்பட்டு, தடித்த அட்டைகளுடன், முகப்பில் வார இதழ்களை அலங்கரித்த அந்தந்தக் கதைகளின் வண்ணப்படங்களைத் தாங்கி அழகாகக் காட்சிதரும் புத்தகங்கள்.
பாவை விளக்கும் அப்படித்தான் வந்தது.
தனது நண்பனொருவனின் கதையை மூலமாக வைத்து அதை அகிலன் எழுதியதாக முன்னுரையில் அவர் எழுதியிருந்ததாய் ஞாபகம்.
"இது அவரின்ரை கதைதான். சும்மா தன்ர கூட்டாளி எண்டு சொல்கிறேர்!" என்றா அக்கா.
எது எப்படியோ எந்தக் கதைக்கும் மூலமாக எவராவது இருந்தாகவேண்டும்.

பாவை விளக்கைப் படிப்பதற்கு முன்-
எனது கற்பனையில் வந்துகொண்டிருந்தவளைக் கதாநாயகியாகவைத்து ஒரு சிறுகதை எழுதியிருந்தேன்.
"சாந்தி என் தங்கை!" கதையின் தலைப்பு.
ஒரு இளைஞனின் ஒருதலைக் காதலைச் சொல்லும் கதை.
கதையை எழுதினாலும் யாரிடமும் காட்டாமல் மறைத்தே வைத்திருந்தேன்.
சின்னண்ணாவின் பார்வையில் அது பட்டுவிட்டது.
அவர் வாசித்து முடித்ததும் தயக்கத்துடன் கேட்டேன்:
"கதை நல்லமா அண்ணை?"
அவர் புன்சிரிப்புடன் "ம்...ம்...!"என்றார்.
(நல்லகாலம் என்ர "கதாநாயகி"யைப் பற்றி அண்ணைக்கு விளங்கேல்லை)
"பேப்பருக்கு அனுப்பினால் போடுவாங்களா அண்ணை?"
"அனுப்பிப் பாரன்.. பிடிச்சிருந்தால் போடுவாங்கள்!"
"பிடிக்காட்டில்..?"
"எதுக்கும் அனுப்பிப் பார்!"
ஆனால் நான் அதை அனுப்பவில்லை. தயக்கம்.
"அந்தக் கதையை அனுப்பி அது பேப்பரிலை வராட்டில்...என்ர கதாநாயகி பாவம்! அவள் என்னட்டையே இருக்கட்டும்!"என்று நினைத்துக் கொண்டேன்.
அந்தக் கதைக்கு அங்கீகாரம் கிடைக்காதுவிட்டால் அது என் கதாநாயகிக்கே அங்கீகாரம் கிடைக்காததுமாதிரி..
அவளுக்கு ஒரு இழுக்கு ஏற்பட நானே காரணமாவதா?வேண்டாம்..(இன்றுவரை அந்தக் கற்பனைக் கதாநாயகி என்னுள்ளேதான் இருக்கிறாள். "என்னைப் போல ஒருத்தியை நீ உன் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாது!" என்று எப்போதாவது கனவில் வந்து சிரித்துப் போகிறாள்.)

பழைய எழுத்தாளர்கள் பலரும் தங்கள் கதாநாயகர்களுக்கான தொழிலாக எழுத்தையே தேர்வுசெய்வது ஏன் என்பது எனக்குப் புரியாவிட்டாலும் எல்லாக் கதாநாயகர்களையும்விட எழுத்தாள கதாநாயகர்களே உயர்ந்தவர்கள் என்பதாக அப்போது எனக்குத் தோன்றியது.
அகிலனின் பாவை விளக்கு கதாநாயகனும் ஒரு எழுத்தாளனாகவே இருந்தான். அதனாலோ என்னவோ அந்தக் கதாநாயகன்மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்தது.
அகிலன் முன்னரும் ஏராளமாக எழுதியிருந்தார் எனினும் நான் வாசித்த அவரது முதல் கதை பாவைவிளக்கு.
கல்கியின் சரித்திர நாவல்களுக்குப் பின்னர், அகிலனின் வேங்கையின் மைந்தன், கயல்விழி ஆகிய சரித்திர நவீனங்களும் என்னை ஈர்த்துக் கொண்டன.
அவரது புதுவெள்ளம் தொடர்கதையாகவே வாசித்தேன்.

கையில் எடுத்துக் கொண்டால் முழுதுமாக வாசித்துவிட்டுத்தான் புத்தகத்தைக் கீழே வைக்கத்தூண்டும் எழுத்துநடையை இவர் எங்கிருந்து கற்றாரோ என்ற வியப்பையே அவரது கதைகளில் உணர்ந்தேன். பெரும்பாலான கதாபாத்திரங்களோடு நாமும் சேர்ந்து வாழ்கிறோம் என்பதுபோன்ற ஒரு அனுபவத்தை அவரது எழுத்துக்கள் தந்தன.
அகிலன் எனக்குள் இடம்பிடித்துக்கொண்டார்.

-சின்னாச்சியின்ரமோன்.

Dienstag, 12. Juni 2007

கிணற்றுத் தவளையும் புதிய உலகமும்



பரந்த இந்த உலகம் பற்றி அதிகம் அறியாத அல்லது அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாத பருவம் அது.


என்வரையில் என் சின்னக் கிராமமே என் உலகம்.

அன்றாட வாழ்க்கையில் அமைதியாய் பொழுதுகளைக் கழிக்கின்ற மனிதர்களே என் உலகத்தில் நிறைந்திருப்பதாய் அப்போது உணர்ந்திருந்தேன்.

(திரையரங்கோ காவல்நிலையமோ என் ஊருக்குள் இருந்ததில்லை என்பதே அதன் சிறப்புக்குப் போதுமான அத்தாட்சி)

பந்தபாசங்கள் நிறைந்த, எதிர்க்கருத்துக் கொண்டவர்களையும் இன்முகத்தோடு வரவேற்ற, சாதி மத பேதங்களுக்குள்ளும் ஒருவரையொருவர் நேசிக்கின்ற, அன்பு பாராட்டுகின்ற மனிதர்களே அடிக்கடி என் கண்களில் எதிர்ப்பட்டார்கள்.


இந்த அன்புலகத்தில் வாழ்ந்தபோதும் இதுமட்டுமே உலகம் அல்ல என்றும், இந்தச் சின்னக் கிராமத்துக்கும் அப்பால் பிரமாண்டமானதும் இந்தக் கிராமத்து மனிதர்களிடத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான மனிதர்களைக் கொண்டதுமான ஓர் உலகம் இருக்கிறது என்றும் எனக்குக் கற்பித்தவை பெரும்பாலான கதைகளே.

ஒவ்வொருவருடைய கதைகளுக்குள்ளும் நடமாடும் கதாபாத்திரங்கள், அவர்களது அனுபவங்கள், என் கிராமத்திலிருந்து விலகி வேறோர் உலகத்துக்கு என்னை அழைத்துச் சென்றன.


சஞ்சிகைகளில் வெளியான அனேகமான கதைகள் "யாவும் கற்பனை" என்று அடிக்குறிப்பிட்டு வந்தன.

"இந்த இதழில் இடம்பெறும் கதைகள், சம்பவங்கள் யாவும் கற்பனையே!" என்று குறிப்பிடுவதன்மூலம் அந்தக் கதைக்கும் அந்தக் கதை தரக்கூடிய பிரச்சனைகளுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று அவை விலகியோடிக்கொண்டிருந்தன.

படைப்பாளர்களே கதைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டி இருந்ததால் உண்மைக்கதை எழுதுபவர்களும் தத்தம் கற்பனைகளைக் கலந்து அது உண்மை என்று தெரியாதவாறு மறைத்துக் கதை எழுதிக் கொண்டிருந்தார்கள்.


ஆனால் கதாபாத்திரங்களுக்குள் தத்தம் குணாதிசயங்களைக் காணும் வாசகர்கள் சிலர் இது உண்மைக்கதைதான் என்று தமக்குள் தீர்மானித்துக் கொண்டார்கள். ஆக ஒவ்வொரு கதையினது கதாபாத்திரங்களும் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வாழவே செய்தார்கள்.


கதைகளை வாசிக்க வாசிக்க அந்தப் பாத்திரங்களோடு ஒன்றித்துப் போகவும் வாசகர்கள் பழகிக்கொண்டார்கள்.

ஒரு பிரபலமான சிறுகதையிலோ நாவலிலோ வரும் ஒரு கதாபாத்திரம் தங்கள் மனதில் நீங்காதிருப்பதாக ஒருவாசகர் சொல்லும்போது அந்தக் கதாபாத்திரமும் இந்த உலகத்தில் உயிருடன் நடமாடுவது போன்ற ஒர் உணர்வை உருவாக்கிடுகிறது.

என் இளயவது வாசிப்பு அனுபவத்தில் நான் சந்தித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் எல்லோரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.

தமிழ்க் கலை இலக்கியத்தில், ஈழத்துக் கலை இலக்கியம் என்று ஒன்று தனியாக இருக்கிறது என்று எனக்குப் புரியாத வயது அது.

என்றென்றும் தமிழகமே தமிழ்க் கலை இலக்கியத்துக்குத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் என்பதே உண்மை என்றானபோதும் நமக்கென்றும் ஓர் தனித்துவம் உண்டு என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

கிணற்றுத் தவளைபோல் என் கிராமமே உலகம் என்று நான் கருதிக் கொண்டிருந்தாலும் இந்த எனது உலகத்துக்குள் முழுத் தமிழகமும் இருந்தது.


எழுத்துக்களாய் உலாவந்த படைப்பாளர்களும், பாடல்களாய் ஒலித்துக்கொண்டிருந்த கவிஞர்களும் பாடகர்களும், இசைத்தட்டுக்களில் வசனம் பேசிக்கொண்டிருந்த நடிகர்களும் என்று எனது உலகத்தில் தமிழகத்தை இணைத்துவிட்டிருந்தார்கள்.

உலகம் புரிய ஆரம்பித்திருந்தது.

வெள்ளைக்காரன் ஆட்சியிலிருந்து இந்தியாவும் இலங்கையும் விடுபட்டபிறகுதான் நான் பிறந்திருந்தேன்.

சுதந்திரப் போராட்டத்தின் பின் விடுதலைபெற்ற அன்றைய தமிழகம் எப்படியிருந்தது என்று எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.


பத்துப்பன்னிரண்டு வருடங்கள் கடந்தபிறகு எங்கள் வீட்டுப் பாட்டுப் பெட்டியில் (கிராமபோன்) ஒலித்த பராசக்தி இசைத்தட்டில் சிவாஜிகணேசன் என்ற நடிகரின் வாய்மூலமாக கலைஞர்மு.கருணாநிதி என்றபடைப்பாளியின் கற்பனையில் உருவான ஒரு அகதித் தமிழனின் உள்ளக் குமுறல் வெளிப்படுவதைக் கேட்டபோது தமிழ்நாடு இப்படித்தான் இருக்கும் என்று எனக்குள் ஒரு படம்விரிந்தது.


(தமிழாக்கள் பாவம்...! சுதந்திரம் கிடைச்சும் சந்தோசமாய் இருக்கமுடியாமல் எவ்வளவு கஷ்டப்படுகுதுகள்! )



மு.கருணாநிதி என்ற அந்த அற்புதமான படைப்பாளியின் அழகுதமிழில் இலயித்துப்போன மனம் அவரைப்போல வார்த்தைகளைக் கையாளவேண்டும் என்ற ஆசையை என்னுள் வளர்த்தது.

மு.கருணாநிதி என்ற அந்தப் படைப்பாளி திரைத்துறை சார்ந்த கலைஞர்களில் ஒருவர் என்றும் திரைப்படங்களுக்குமட்டும் கதைவசனம் எழுதுகிறவர்போலும் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன்.






-சின்னாச்சியின்ரமோன்



Sonntag, 3. Juni 2007

அன்பே சிவம்


 
















1960களின் முற்பகுதி...
ஏழாம் வகுப்பு.
தமிழ்ப் பாடநேரம் முடிந்த இடைவேளை.
தமிழ்ப்பாடம் நடத்திக்கொண்டிருந்த இளைஞரான அந்த ஆசிரியரின் முன்னால் போய் நிற்கிறேன்.
கையிலிருந்த ஒரு கடிதத்தை அவரிடம் நீட்டுகிறேன்.
"என்ன..?"
"இது உங்களுக்குத்தான் மாஸ்ரர்... கடிதம்!"
(இராஜேஸ்வரி வித்தியாசாலையில் வாத்தியார். மகாவித்தியாலத்தில் மாஸ்ரர்.)
"கடிதமா.. எனக்கா..? ஆர் தந்தது?"
" இது நான் எழுதின கடிதம்!"
-அவர் ஆச்சரியத்தோடு, ஆனால் வழக்கமான அவரது அழகான சிரிப்போடு என்னைப் பார்த்தார்.
கடிதத்தை அவர் பிரிக்கும்போது நான் திரும்பவும் போய் எனது இருக்கையில் உட்கார்ந்துகொள்கிறேன்.
சக மாணவ மாணவிகள் என்னைப் பார்க்கிறார்கள்.
எனது கடிதத்தைப் படித்துவிட்டு அவர் தரப்போகும் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்.
கடிதத்தைப் படித்தவர் அதைத் திரும்ப மடித்தபடி என்னைப் பார்க்கிறார்.
" எதற்காக எனது அனுமதி வேண்டும். உங்களது விருப்பப்படியே செய்யலாமே!"
" இல்லை மாஸ்ரர். ஏற்கனவே இளைஞர் மன்றம் எண்டு ஒண்டை நீங்கள் உருவாக்கியிருக்கிறீங்கள்.. நாங்கள் சின்னப்பெடியள்.. எங்களுக்கெண்டு ஒரு மன்றத்தை நாங்கள் உருவாக்கிறபோது உங்களிட்டையும் அனுமதி கேட்கவேணுமெண்டு நினைச்சம்.! அதுதான்!"
" அதை வாயாலேயே கேட்டிருக்கலாமே.. ஏன் கடிதம்?"
" நேரடியாகக் கேட்க ஒரு மாதிரியிருந்துது அதுதான்!"
" சரி.. உங்கடை விருப்பப்படியே நடத்துங்கோ! ஆனா வாலிபர் மன்றம் எண்டு போடாமல் சிறுவர் மன்றம் எண்டு போடுங்கோ!"
என்னதான் எங்களை நாங்கள் சின்னப் பெடியள் என்று சொல்லிக் கொண்டாலும் "வாலிபர் எண்டு போடாதேங்கோ!" என்று ஆசிரியர் சொன்னதும் மனதுக்கு ஒருமாதிரித்தான் இருந்தது.
சிறுவர் என்று போட மனம்வராமல் அதைப்பற்றி அவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இளந்தமிழர் மன்றம் என்று பெயரைப் போட்டுக்கொண்டோம்.
இளந்தமிழர் மன்றம் என்ற ஒன்றை உருவாக்கி கூடப் படிக்கும் அயல்நண்பர்களுடன் "கலைப்பணி"க்கு அத்திவாரம் இட்டாயிற்று. கண்ணகியம்மன் கோயில் தண்ணீர்ப் பந்தலைக் காரியாலயமாக்கிக் கொண்டோம்.
மகன் கொஞ்சம் அறிவு பூர்வமான காரியங்களில் ஈடுபடுகிறான் என நினைத்தோ என்னவோ அப்பா இப்போது தன் கட்டுப்பாட்டைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தார்.
மன்றத்தை உருவாக்கிவிட்டு சும்மா இருக்க முடியாது என்று நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டோம்.
"ஈழநாட்டு வேந்தன்!" என்று தலைப்பிட்டு ஒரு நாடகம் எழுதினேன்.
அதை மேடையேற்றியது சுவையான அனுபவமாக இருந்தது.
நாடகம் எழுதுவதற்கான முதல் உற்சாகம் எனக்கு ஏற்படக் காரணமாயிருந்தது எது என்று இப்போது எண்ணிப் பார்க்கிறபோது என் மனக்கண்ணில் வந்து நிற்கிற முகத்துக்குரியவர் நான் மேலே குறிப்பிட்ட எனது ஆசிரியர்தான். 

அவர் மேடையேற்றிய "வாழ்வுப்பலி" என்ற நாடகம் என் மனதில் நிரந்தரமாகப் பதிந்துபோயிருக்கிறது.
திரைப்படங்களின் ஆதிக்கமற்ற ஊரில் நாடகங்கள் வரவேற்புப் பெற்றிருந்தன எனினும் அந்தக் காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்துதான் கலைஞர்கள் வந்து நாடகங்களை மேடையேற்றிப் போய்க்கொண்டிருந்தார்கள்.
"வாழ்வுப்பலி" நாடகத்தைப் பார்ப்பதற்கு முன் -என் பதின்ம வயதுகளின் தொடக்கத்தில்- யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கலைஞர்களால் மேடையேற்றப்பட்ட ஒரேயொரு நாடகத்தைப் பார்த்திருக்கிறேன்.
"உதயசூரியன்" என்பது நாடகத்தின் பெயர் என்பதாக ஞாபகம்.
சரித்திர நாடகம் எனினும் சமூகப் படப் பாடல்களை அதில் இணைத்திருந்தார்கள்.
"எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா?"
"பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே!" போன்ற பாடல்களை அவர்களே பாடி நடித்தார்கள்.
அவர்களைச் சினிமா நடிகர்கள்போல் நான் கற்பனை செய்திருந்தேன்.
அவர்களை மறுபடி பார்க்கவேண்டும் போல் ஆவலாகக் கூட இருந்தது அந்தவயதில்.

இந்தநேரத்தில் வாழ்வுப்பலி அற்புதமான சமூக நாடகமாக எல்லோராலும் பாராட்டப்பட்டது.
அந்த நாடகத்தின்மூலம் என் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்ட என் ஆசிரியர்-
திரு.ஐ.சிவசாமி அவர்கள்.

என்வரையில் அவர் ஒரு கதாநாயகனாகவே எனக்குத் தோன்றினார். கலைத்துறையிலும் எழுத்துத்துறையிலும் அவர்காட்டிய ஆர்வம் என்னுள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
நேரடியாக அவரது கலைப்பணிகளில் நான் பங்கு கொள்ளாவிட்டாலும் அவர் எனது நினைவுகளில் நிரந்தரமாக இருக்கிறார்.ஆரவாரமற்று அமைதியாகக் கலைப் பணிபுரியலாம் என்ற குணாதிசயம் அவரிடமிருந்து மானசீகமாக நான் கற்றுக்கொண்டது.
வாழ்வுப் பலி நாடகம் பற்றி இங்கு நான் சொல்ல வந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் உண்டு.
அந்த நாடகத்தின் கதாநாயகனான இளைஞன்-
ஒருநாள் எங்கள் பாடசாலைக்கு வந்திருந்தார்.
கைகளில் சில நூல்களை வைத்திருந்தார்.
அவரே எழுதிய நூல் அது என்றும் அதை ஆசிரியர்களுக்கு விநியோகிக்க வந்திருப்பதாகவும் அறிந்துகொண்டேன்.
நூலின் தலைப்பு -"ஈழத்துச் சொற்செல்வர்கள்"
நூலின் படைப்பாளர்
- ஈழத்துச் சிவானந்தன்.

அவரை ஒரு நடிகனாகமட்டுமே நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அவர் ஒரு எழுத்தாளர் என்று அறிந்ததும் அவர்மீது ஒரு மதிப்பு வந்தது.
எங்கள் ஊர் எழுத்தாளர் என்று என் சின்னவயசில் என்னால் முதன்முதலாக அறிந்துகொள்ளப்பட்டவர்- இன்று புலவர் ஈழத்துச் சிவானந்தன் என்று திகழும் ஈழத்துச் சிவானந்தன் அவர்கள்.

-சின்னாச்சியின்ரமோன்