Sonntag, 3. Juni 2007

அன்பே சிவம்


 
















1960களின் முற்பகுதி...
ஏழாம் வகுப்பு.
தமிழ்ப் பாடநேரம் முடிந்த இடைவேளை.
தமிழ்ப்பாடம் நடத்திக்கொண்டிருந்த இளைஞரான அந்த ஆசிரியரின் முன்னால் போய் நிற்கிறேன்.
கையிலிருந்த ஒரு கடிதத்தை அவரிடம் நீட்டுகிறேன்.
"என்ன..?"
"இது உங்களுக்குத்தான் மாஸ்ரர்... கடிதம்!"
(இராஜேஸ்வரி வித்தியாசாலையில் வாத்தியார். மகாவித்தியாலத்தில் மாஸ்ரர்.)
"கடிதமா.. எனக்கா..? ஆர் தந்தது?"
" இது நான் எழுதின கடிதம்!"
-அவர் ஆச்சரியத்தோடு, ஆனால் வழக்கமான அவரது அழகான சிரிப்போடு என்னைப் பார்த்தார்.
கடிதத்தை அவர் பிரிக்கும்போது நான் திரும்பவும் போய் எனது இருக்கையில் உட்கார்ந்துகொள்கிறேன்.
சக மாணவ மாணவிகள் என்னைப் பார்க்கிறார்கள்.
எனது கடிதத்தைப் படித்துவிட்டு அவர் தரப்போகும் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்.
கடிதத்தைப் படித்தவர் அதைத் திரும்ப மடித்தபடி என்னைப் பார்க்கிறார்.
" எதற்காக எனது அனுமதி வேண்டும். உங்களது விருப்பப்படியே செய்யலாமே!"
" இல்லை மாஸ்ரர். ஏற்கனவே இளைஞர் மன்றம் எண்டு ஒண்டை நீங்கள் உருவாக்கியிருக்கிறீங்கள்.. நாங்கள் சின்னப்பெடியள்.. எங்களுக்கெண்டு ஒரு மன்றத்தை நாங்கள் உருவாக்கிறபோது உங்களிட்டையும் அனுமதி கேட்கவேணுமெண்டு நினைச்சம்.! அதுதான்!"
" அதை வாயாலேயே கேட்டிருக்கலாமே.. ஏன் கடிதம்?"
" நேரடியாகக் கேட்க ஒரு மாதிரியிருந்துது அதுதான்!"
" சரி.. உங்கடை விருப்பப்படியே நடத்துங்கோ! ஆனா வாலிபர் மன்றம் எண்டு போடாமல் சிறுவர் மன்றம் எண்டு போடுங்கோ!"
என்னதான் எங்களை நாங்கள் சின்னப் பெடியள் என்று சொல்லிக் கொண்டாலும் "வாலிபர் எண்டு போடாதேங்கோ!" என்று ஆசிரியர் சொன்னதும் மனதுக்கு ஒருமாதிரித்தான் இருந்தது.
சிறுவர் என்று போட மனம்வராமல் அதைப்பற்றி அவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இளந்தமிழர் மன்றம் என்று பெயரைப் போட்டுக்கொண்டோம்.
இளந்தமிழர் மன்றம் என்ற ஒன்றை உருவாக்கி கூடப் படிக்கும் அயல்நண்பர்களுடன் "கலைப்பணி"க்கு அத்திவாரம் இட்டாயிற்று. கண்ணகியம்மன் கோயில் தண்ணீர்ப் பந்தலைக் காரியாலயமாக்கிக் கொண்டோம்.
மகன் கொஞ்சம் அறிவு பூர்வமான காரியங்களில் ஈடுபடுகிறான் என நினைத்தோ என்னவோ அப்பா இப்போது தன் கட்டுப்பாட்டைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தார்.
மன்றத்தை உருவாக்கிவிட்டு சும்மா இருக்க முடியாது என்று நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டோம்.
"ஈழநாட்டு வேந்தன்!" என்று தலைப்பிட்டு ஒரு நாடகம் எழுதினேன்.
அதை மேடையேற்றியது சுவையான அனுபவமாக இருந்தது.
நாடகம் எழுதுவதற்கான முதல் உற்சாகம் எனக்கு ஏற்படக் காரணமாயிருந்தது எது என்று இப்போது எண்ணிப் பார்க்கிறபோது என் மனக்கண்ணில் வந்து நிற்கிற முகத்துக்குரியவர் நான் மேலே குறிப்பிட்ட எனது ஆசிரியர்தான். 

அவர் மேடையேற்றிய "வாழ்வுப்பலி" என்ற நாடகம் என் மனதில் நிரந்தரமாகப் பதிந்துபோயிருக்கிறது.
திரைப்படங்களின் ஆதிக்கமற்ற ஊரில் நாடகங்கள் வரவேற்புப் பெற்றிருந்தன எனினும் அந்தக் காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்துதான் கலைஞர்கள் வந்து நாடகங்களை மேடையேற்றிப் போய்க்கொண்டிருந்தார்கள்.
"வாழ்வுப்பலி" நாடகத்தைப் பார்ப்பதற்கு முன் -என் பதின்ம வயதுகளின் தொடக்கத்தில்- யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கலைஞர்களால் மேடையேற்றப்பட்ட ஒரேயொரு நாடகத்தைப் பார்த்திருக்கிறேன்.
"உதயசூரியன்" என்பது நாடகத்தின் பெயர் என்பதாக ஞாபகம்.
சரித்திர நாடகம் எனினும் சமூகப் படப் பாடல்களை அதில் இணைத்திருந்தார்கள்.
"எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா?"
"பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே!" போன்ற பாடல்களை அவர்களே பாடி நடித்தார்கள்.
அவர்களைச் சினிமா நடிகர்கள்போல் நான் கற்பனை செய்திருந்தேன்.
அவர்களை மறுபடி பார்க்கவேண்டும் போல் ஆவலாகக் கூட இருந்தது அந்தவயதில்.

இந்தநேரத்தில் வாழ்வுப்பலி அற்புதமான சமூக நாடகமாக எல்லோராலும் பாராட்டப்பட்டது.
அந்த நாடகத்தின்மூலம் என் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்ட என் ஆசிரியர்-
திரு.ஐ.சிவசாமி அவர்கள்.

என்வரையில் அவர் ஒரு கதாநாயகனாகவே எனக்குத் தோன்றினார். கலைத்துறையிலும் எழுத்துத்துறையிலும் அவர்காட்டிய ஆர்வம் என்னுள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
நேரடியாக அவரது கலைப்பணிகளில் நான் பங்கு கொள்ளாவிட்டாலும் அவர் எனது நினைவுகளில் நிரந்தரமாக இருக்கிறார்.ஆரவாரமற்று அமைதியாகக் கலைப் பணிபுரியலாம் என்ற குணாதிசயம் அவரிடமிருந்து மானசீகமாக நான் கற்றுக்கொண்டது.
வாழ்வுப் பலி நாடகம் பற்றி இங்கு நான் சொல்ல வந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் உண்டு.
அந்த நாடகத்தின் கதாநாயகனான இளைஞன்-
ஒருநாள் எங்கள் பாடசாலைக்கு வந்திருந்தார்.
கைகளில் சில நூல்களை வைத்திருந்தார்.
அவரே எழுதிய நூல் அது என்றும் அதை ஆசிரியர்களுக்கு விநியோகிக்க வந்திருப்பதாகவும் அறிந்துகொண்டேன்.
நூலின் தலைப்பு -"ஈழத்துச் சொற்செல்வர்கள்"
நூலின் படைப்பாளர்
- ஈழத்துச் சிவானந்தன்.

அவரை ஒரு நடிகனாகமட்டுமே நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அவர் ஒரு எழுத்தாளர் என்று அறிந்ததும் அவர்மீது ஒரு மதிப்பு வந்தது.
எங்கள் ஊர் எழுத்தாளர் என்று என் சின்னவயசில் என்னால் முதன்முதலாக அறிந்துகொள்ளப்பட்டவர்- இன்று புலவர் ஈழத்துச் சிவானந்தன் என்று திகழும் ஈழத்துச் சிவானந்தன் அவர்கள்.

-சின்னாச்சியின்ரமோன்



Keine Kommentare: