Samstag, 23. Juni 2007

அரும்பு மீசை




வாழ்க்கை என்பது ஒன்று போலத் தோன்றினாலும் உண்மையில் அது இரண்டு.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஒருமுறைதான் வாழ்கிறோம் என்பதில் உண்மையில்லை.
நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாய் நிச்சயிக்கப்பட்டுவிட்ட வாழ்க்கை.
அகத்திலும் புறத்திலுமாய் ஒரு சமயத்தில் இருவேறுபட்ட வாழ்வை ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
உயிர்கொண்ட உடல் வாழும் வாழ்க்கை என்பது ஒன்று.
இந்த உடலுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் மனம் வாழும் வாழ்க்கை என்பது மற்றொன்று.
ஒவ்வொருவரும் நினைத்தபடி வாழ முடிவதில்லை என்பது ஒரு வாழ்க்கை. நினைவுகளிலேயே வாழ்ந்துகொண்டிருப்பது ஒரு வாழ்க்கை.
எதைப்பற்றியும் கவலைகொள்ளாத வயதுகளைக்கடந்து ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கிற பருவத்துக்கு வந்தாயிற்று.
மேலுதட்டின்மீது மெள்ள அரும்பும் மீசை.
யாரும் அறியாமல் வலது கைப் பெருவிரலும் ஆள்காட்டி விரலும் கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் மேலுதட்டை மெள்ள வருடுகையில் அரும்பு மீசையின் மென்மையில் ஆண்மையின் வன்மை துளிர்ப்பது தெரிகிறது.
உனக்குள் இன்னொருவன் உருவாகிவிட்டான் என்று உணர்த்துகிறது காலம்.
"நான் இப்ப சின்னப் பெடியன் இல்லை... நானும் வளர்ந்திட்டன்!" என்று நினைக்கும்போது எனக்குள்ளே இன்னொருவனைக் காண்கிற வியப்புடன் கூடவே ஒருவித பெருமிதமும் மனதில் வந்து ஒட்டிக்கொள்கிறது.
மேலுதட்டில் மீசையும் கீழுதட்டில் பீடியுமாய் என் வயதொத்த பெடியன்கள்.

அப்போதைய சூழ்நிலையில் நான் படித்த கதைகள், கேட்ட பாடல்கள் பலவும் காதல் தோல்வியைச் சொல்லி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தன.
"காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் கலங்குகிறான் அவளை நெஞ்சில் இருத்தி!" என்று ஏ.எம்.ராஜா வானொலிப்பெட்டிக்குள் அடிக்கடி அழுது கொண்டிருந்தார்.
"ஏட்டில் எழுதிவைத்தேன் எழுதியதைச் சொல்லிவைத்தேன்.. கேட்டவளைக் காணோமடா இறைவா கூட்டிச் சென்ற இடமேதடா" என்று மறுபக்கத்தில் கண்ணதாசன், செளந்தரராஜனின் குரலில் தவித்துக் கொண்டிருந்தார்.
கனவுக் காதலியோடு சோகம்கலந்த சுகமான ஒரு தனிமையில் உறவாடும் அரும்புமீசைப் பருவத்தில் என் கையில் கிடைத்த ஒரு நவீனம்-
அகிலனின் "பாவை விளக்கு!"
தொடர்கதையாக வந்த பெரும்பாலான கதைகளை வார இதழ்களிலிருந்து தனித்தனி அத்தியாயங்களாகச் சேகரித்து முழுமையான நவீனங்களாக உருவாக்கி புத்தகங்களாகச் சேகரிக்கும் பழக்கம் என் சின்னண்ணாவிடம் இருந்தது. ஒவ்வொரு தடவையும் அவர் ஊருக்கு வரும்போதும் சில புத்தகங்களுடன்தான் வருவார்.
எல்லாம் அழகாகக் கட்டப்பட்டு, தடித்த அட்டைகளுடன், முகப்பில் வார இதழ்களை அலங்கரித்த அந்தந்தக் கதைகளின் வண்ணப்படங்களைத் தாங்கி அழகாகக் காட்சிதரும் புத்தகங்கள்.
பாவை விளக்கும் அப்படித்தான் வந்தது.
தனது நண்பனொருவனின் கதையை மூலமாக வைத்து அதை அகிலன் எழுதியதாக முன்னுரையில் அவர் எழுதியிருந்ததாய் ஞாபகம்.
"இது அவரின்ரை கதைதான். சும்மா தன்ர கூட்டாளி எண்டு சொல்கிறேர்!" என்றா அக்கா.
எது எப்படியோ எந்தக் கதைக்கும் மூலமாக எவராவது இருந்தாகவேண்டும்.

பாவை விளக்கைப் படிப்பதற்கு முன்-
எனது கற்பனையில் வந்துகொண்டிருந்தவளைக் கதாநாயகியாகவைத்து ஒரு சிறுகதை எழுதியிருந்தேன்.
"சாந்தி என் தங்கை!" கதையின் தலைப்பு.
ஒரு இளைஞனின் ஒருதலைக் காதலைச் சொல்லும் கதை.
கதையை எழுதினாலும் யாரிடமும் காட்டாமல் மறைத்தே வைத்திருந்தேன்.
சின்னண்ணாவின் பார்வையில் அது பட்டுவிட்டது.
அவர் வாசித்து முடித்ததும் தயக்கத்துடன் கேட்டேன்:
"கதை நல்லமா அண்ணை?"
அவர் புன்சிரிப்புடன் "ம்...ம்...!"என்றார்.
(நல்லகாலம் என்ர "கதாநாயகி"யைப் பற்றி அண்ணைக்கு விளங்கேல்லை)
"பேப்பருக்கு அனுப்பினால் போடுவாங்களா அண்ணை?"
"அனுப்பிப் பாரன்.. பிடிச்சிருந்தால் போடுவாங்கள்!"
"பிடிக்காட்டில்..?"
"எதுக்கும் அனுப்பிப் பார்!"
ஆனால் நான் அதை அனுப்பவில்லை. தயக்கம்.
"அந்தக் கதையை அனுப்பி அது பேப்பரிலை வராட்டில்...என்ர கதாநாயகி பாவம்! அவள் என்னட்டையே இருக்கட்டும்!"என்று நினைத்துக் கொண்டேன்.
அந்தக் கதைக்கு அங்கீகாரம் கிடைக்காதுவிட்டால் அது என் கதாநாயகிக்கே அங்கீகாரம் கிடைக்காததுமாதிரி..
அவளுக்கு ஒரு இழுக்கு ஏற்பட நானே காரணமாவதா?வேண்டாம்..(இன்றுவரை அந்தக் கற்பனைக் கதாநாயகி என்னுள்ளேதான் இருக்கிறாள். "என்னைப் போல ஒருத்தியை நீ உன் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாது!" என்று எப்போதாவது கனவில் வந்து சிரித்துப் போகிறாள்.)

பழைய எழுத்தாளர்கள் பலரும் தங்கள் கதாநாயகர்களுக்கான தொழிலாக எழுத்தையே தேர்வுசெய்வது ஏன் என்பது எனக்குப் புரியாவிட்டாலும் எல்லாக் கதாநாயகர்களையும்விட எழுத்தாள கதாநாயகர்களே உயர்ந்தவர்கள் என்பதாக அப்போது எனக்குத் தோன்றியது.
அகிலனின் பாவை விளக்கு கதாநாயகனும் ஒரு எழுத்தாளனாகவே இருந்தான். அதனாலோ என்னவோ அந்தக் கதாநாயகன்மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்தது.
அகிலன் முன்னரும் ஏராளமாக எழுதியிருந்தார் எனினும் நான் வாசித்த அவரது முதல் கதை பாவைவிளக்கு.
கல்கியின் சரித்திர நாவல்களுக்குப் பின்னர், அகிலனின் வேங்கையின் மைந்தன், கயல்விழி ஆகிய சரித்திர நவீனங்களும் என்னை ஈர்த்துக் கொண்டன.
அவரது புதுவெள்ளம் தொடர்கதையாகவே வாசித்தேன்.

கையில் எடுத்துக் கொண்டால் முழுதுமாக வாசித்துவிட்டுத்தான் புத்தகத்தைக் கீழே வைக்கத்தூண்டும் எழுத்துநடையை இவர் எங்கிருந்து கற்றாரோ என்ற வியப்பையே அவரது கதைகளில் உணர்ந்தேன். பெரும்பாலான கதாபாத்திரங்களோடு நாமும் சேர்ந்து வாழ்கிறோம் என்பதுபோன்ற ஒரு அனுபவத்தை அவரது எழுத்துக்கள் தந்தன.
அகிலன் எனக்குள் இடம்பிடித்துக்கொண்டார்.

-சின்னாச்சியின்ரமோன்.

Keine Kommentare: