"நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா!
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு..."
-அதிகாலையில் ஒலிபெருக்கிவழியாக துயில் எழுப்பும் எம். எம். தண்டபாணி தேசிகரின் கணீா்க்குரல்.
திருவிழாக்காலங்கள்..
கண்ணகி கோயிலின் முற்றத்துப் பந்தற்கால்களில் உயரக் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி வழியாக தேவார திருவாசகங்கள் ஊருக்குள் உலாவந்துகொண்டிருக்கும்.
இன்னும் கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்தபோதும் தூங்காமல் கண்களை மூடிக்கொண்டு இசையை இரசித்துக் கிடப்பதில் ஒரு சுகம்.
அதில் ஒருபோதும் சலிப்பு வந்ததில்லை.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்,கே.பி.சுந்தராம்பாள் என்று பக்திப்பாடல்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்த அந்தப் பொழுதுகளில்தேவார திருவாசகங்களோடு வந்த தண்டபாணி தேசிகரின் குரலில் மனமும் சற்று ஆழமாகவே மூழ்கிக் களித்தது.
என் வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்த கலட்டிப் பிள்ளையார் கோயிலில் பங்குனித் திங்களில் உற்சவங்கள் நடக்கும். 7ம் திருவிழா அப்பு(அப்பா)வினதும் அவரது உடன் பிறப்புக்களினதும் உபயமாக இருந்தது.
முன்பெல்லாம் கண்ணகி அம்மன் கோயில் திருவிழாக்களில் அயலுார்களிலிருந்தெல்லாம் மேளக்கச்சேரி, பொம்மலாட்டம், கதாகாலாட்சேபம் என்று கலை நிகழ்வுகளோடு ஆலயத்திருவிழாக்கள் அமர்க்களப்படும்.
பின்னாட்களில் இந்தக் கூத்துக் கும்மாளங்கள் கோயில் திருவிழாக்களுக்குக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள் போலும். ஆனால் மேளக்கச்சேரிகளும் கதாப்பிரசங்கங்களும் தொடர்ந்து நடைபெற்றன.
அப்பாவுக்கு ஆடம்பரத் திருவிழாக்கள் பிடிப்பதில்லை.
எனக்கென்னமோ இந்தக் கலைநிகழ்வுகள் இருந்தால்தான் திருவிழாக்களுக்கு சிறப்பு என்பதைப்போல் ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருந்தது.
"இண்டைக்குத் திருவிழாவிலை என்ன விசேசம்?" என்று ஆராவது கேட்டால், இத்தனைகூட்டம் மேளக்கச்சேரி என்றோ இன்னாரின் நாட்டியம் என்றோ இன்னாரின் கதாப்பிரசங்கம் என்றோ "நோட்டீஸ்" அடித்துக் காட்டுவதில் பெருமைப்படுகிற திருவிழாக்காரரைப் பார்க்கையில் சந்தோசமாக இருக்கும்.
"திருவிழா எண்டால் இப்படி இருக்கவேணும்!" என்பேன்.
"அப்புவுக்கு இதெல்லாம் பிடிக்காது.. இப்ப அவரின்ரை விருப்பப்படி நடக்கட்டும்.. நாங்களும் திருவிழாச்செய்கிற காலத்திலை இந்தியாவிலையிருந்து சீர்காழியைக் கூப்பிடுவம்!" என்று சொல்லிச் சிரிப்பார் என் பெரியண்ணா.
1960களில்-
கலட்டிப் பிள்ளையார் கோயிலின் எங்கள் திருவிழா நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
"இண்டைக்கு எங்கடை திருவிழாவிலை ஒரு விசேசம்!"
"என்ன"
"இண்டைக்கு இரவு கதாப்பிரசங்கம் இருக்குது!"
"ஆர்.. திருமுருக கிருபானந்தவாரியாரோ?"
"இல்லை..திருமுருக நல்லதம்பி!"
"ஆர்..?"
"அவர்தான்ரா எங்கடை நல்லதம்பி மாமா!"
ஆச்சரியமாக இருந்தது.
இரத்தினபுரியிலோ எங்கோ கடை முதலாளியாக இருக்கிற எங்கள் மாமா (என் தாயின் தம்பி) கதாப்பிரசங்கமும் செய்வாரா?
"இரத்தினபுரியிலை இருக்கிற ஒரு கோயில்லை மாமா ஒருமுறை கதாப்பிரசங்கம் செய்தபோது அங்கை வந்திருந்த திருமுருக கிருபானந்தவாரியாரே அவருக்கு திருமுருக நல்லதம்பி எண்டு பட்டம் குடுத்தவராம்!"
-கேட்டபோது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
கலைகள் என்பது வெறுமனே எங்கிருந்தோ இறக்குமதியாகிற விடயமல்ல. அது ஒவ்வொருவர் மனதிலும் ஊற்றெடுக்கிற உணர்வுகளின் பிரதிபலிப்பு. கலைகளின்பால் அதீத பற்றுதலும் அதற்கென அயராது உழைத்தலும் ஒருவனைப் பிரபலமாக்கிவிடுகிறதே தவிர, ஏராளமான கலைஞர்கள் உலகின் எல்லா மூலைகளுக்குள்ளும் நடமாடிக்கொண்டுதானிருக்கிறார்கள் என்ற உண்மை மாமாவின் உருவத்தில் எனக்கு வெளிப்பட்டது.
ஏடுகளில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிற கதைகளைவிட முன்னைய காலங்களில் கதாகாலாட்சேபம் போன்ற நிகழ்வுகள்மூலம் பரவலான கதைகள் ஏராளமாக இருந்திருக்கவேண்டும்.
வாரியார் சுவாமிகளைப்போன்று என் மாமாவைப்போன்று எத்தனை ஆயிரக்கணக்கான கதாசிரியர்களை தமிழ் எழுத்துலகம் சந்தித்திருக்கும்.
எழுத்துவடிவில் அவை இடம்பெறாதபோதும் பலரது செவிவழி புகுந்து அவர்களது மனங்களில் அவை நிலைபெற்றிருக்கும் என்பதுமட்டும் நிச்சயம்.
இளம்வயதிலேயே அவர் மறைந்துவிட்டாலும் அவரது கம்பீரமான அந்தக் குரலும் அவரது கதாப்பிரசங்கமும் இப்போதும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
"உங்கடை மச்சான் எண்டதாலதான் நல்லதம்பியின்ர கதாப்பிரசங்கத்துக்கு உங்கடை திருவிழாவிலை இடம் கொடுத்தனீங்களே?" என்று யாரோ அப்பாவைக் கேட்டார்கள்.
"மச்சான் எண்டதால இல்லை. கதாப்பிரசங்கத்திலை கெட்டிக்காரன் எண்டதாலை!" என்றார் அப்பா.
-சின்னாச்சியின்ரைமோன்.
